'அதிமுகவை குப்புறத் தள்ளிய பஞ்ச கல்யாணி குதிரை':துரைமுருகன்
சென்னை: பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை 'பஞ்ச கல்யாணி' குதிரையைப் போன்றது என்று அந்தத் துறையின் அமைச்சரான துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் இந்தத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
இந்தத் துறை மிகவும் முக்கியமான துறை. கண்ணாடி டம்ளர் போன்றது. பஞ்ச கல்யாணி குதிரை போன்றது. மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். ஒரு முதல்வர் அதனை சரியாக நிர்வகித்தால் அந்த குதிரை மீது ஏறி ஜாம்ஜாம் என்று சவாரி செய்யலாம். இல்லையென்றால், எந்த முதல்வர் சரியாக நிர்வகிக்கவில்லையோ, தவறாக பயன்படுத்துகிறாரோ அவரை குப்புற தள்ளி குழியும் பறிக்கும்.
அதிமுக இந்த குதிரை மீது கொஞ்சம் விளையாடி விட்டார்கள். ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். குதிரை மிரண்டு விட்டது, கீழே தள்ளிவிட்டது.
அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டம், உரிமைகள் பறிப்பு இதையெல்லாம் செய்ததன் விளைவு அவர்கள் (அதிமுக) அங்கே (எதிர்க்கட்சியாக), நாங்கள் இங்கே (ஆளும் கட்சியாக) என்றார் துரைமுருகன்.
அப்போது அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
ஆனாலும் தொடர்ந்து பேசிய துரைமுருகன், நீங்கள் மட்டுமில்லை, நாங்களாக இருந்தாலும், வேறு கட்சியாக இருந்தாலும் அந்த பஞ்ச கல்யாணியிடம் விஷமம் பண்ண முடியாது.
பின்னர் முதல்வராக வந்த கருணாநிதி, பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்கினார். ஒரே கையெழுத்தில் 4,65,748 பேருக்கு வேலை வழங்கினார். பல்வேறு சலுகைகளை வழங்கினார். அதனால் தான் இந்த சட்டமன்றத்தில் எங்களை உட்கார வைத்திருக்கிறார்கள்.
ஸ்டிரைக் காலத்தில் ரூ.4000 சம்பளத்தில் 11,356 பேரை அதிமுக ஆட்சியில் தாற்காலிகமாக நியமித்தார்கள், அதோடு முடிந்துவிட்டது. இவர்கள் வீட்டுக்கு போய்விட்டார்கள். இப்போது முதல்வர் கருணாநிதி தான் அவர்களுக்கு சம்பளத்தை ரூ.1,000 உயர்த்தியிருக்கிறார். அரசு தேர்வாணையம் மூலம் அவர்களில் 2761 பேரை இளநிலை உதவியாளர்களாக நியமித்துள்ளார்.
இதனால் தான் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் கண்கண்ட தெய்வமாக கருணாநிதி விளங்குகிறார் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications