தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சார வினியோகம்: உறுதி செய்தது நீதிமன்றம்
சென்னை: தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சார விநியோகத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ என்ற தனியார் மின் விற்பனை நிறுவனத்துடன் ஏப்ரல், மே மாதங்களில் 300 மெகாவாட் மின்சாரம் பெற தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டது.
அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா 300 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.24 என்ற விலையில் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தங்களது மாநிலத்தில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுவதாகவும், எனவே அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடக மாநிலத்துக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கர்நாடக மின் விநியோக நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு ஏப்ரல் 3ம் தேதி உத்தரவிட்டது.
பெங்களூரில் உள்ள தென் மண்டல மின் விநியோக நிறுவனம் இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தகவல் அனுப்பியது.
அதில், ஏற்கனவே உறுதியளித்தவாறு தமிழகத்துக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை மின்சாரத்தை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் வாரியம் வழக்குத் தொடர்ந்தது. தென் மண்டல மின் பகிர்வு நிலையத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் ஏப்ரல் 7ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 8ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகத்துக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தென் மண்டல மின் பகிர்வு நிலையத்தின் பொதுமேலாளர் ரகுராமன், ஜேஎஸ்டபிள்யூ மின்சார விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.ராவ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டுக்கு 300 மெகாவாட் மின்சாரத்தை ஒப்பந்தப்படி தொடர்ந்து விநியோகிக்க அனுமதி அளிக்கக் கோரி ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, 'ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கான மின்சார விநியோகத்தை தாமதமின்றி தொடர்ந்து வழங்க தென் மண்டல மின் பகிர்வு நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நிவாரணம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications