ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி-2 சிறிய என்ஜின்களில் கோளாறு!

அத்துடன் அதனுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்த ராக்கெட் தோல்வியை சந்தித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஜிசாட்-4 செயற்கைக்கோளுடன் இந்த ராக்கெட் மாலை 4.27 மணிக்கு, திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அது தனது உரிய உயரத்தை அடையவில்லை.
இது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராக்கெட்டின் முதல் இரு கட்ட என்ஜின்களும் திட எரிபொருளால் இயங்குபவை. அவை சரியாக செயல்பட்டன.
ஆனால், மூன்றாவது கட்ட என்ஜினான க்ரையோஜெனிக் என்ஜின் இயங்க ஆரம்பித்த நிலையில், அதன் துணை என்ஜின்களான 2 'லீனியர்/வெர்னியர்' என்ஜின்கள் இயங்கவில்லை.
இவை தான் ராக்கெட்டின் திசையை கட்டுப்படுத்தும் என்ஜின்களாகும். இவை இயங்காமல் போனதால் க்ரையோஜெனிக் என்ஜின் சரியாக செயல்பட்டும் கூட ஜிஎஸ்எல்வி தனது பாதைவிட்டு விலகிச் சென்றுவிட்டது.
அது புவி வட்டப் பாதையை அடையவில்லை. அதே நேரத்தில் ராக்கெட்டின் க்ரையோஜெனிக் என்ஜின் இயங்கியது என்பதற்கான சில சமிஞைகள் (indication) கிடைத்துள்ளன. ராக்கெட்டின் பயண டேட்டாவை முழுமையாக ஆராய்ந்தால் தான் சரியான காரணங்கள் தெரியும் என்றார்.
அனைத்தும் சரியாக செயல்பட்டிருந்தால் ஏவப்பட்ட 1,022 விநாடிகளில் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில், புவி வட்டப் பாதையில் ஜிசாட்-4 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் செலுத்தியிருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்கும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
50 மீட்டர் உயரம், 416 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ரூ. 420 கோடி செலவில் தயாரிக்கப்பட்டன.
ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தால் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளோடு க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டுள்ள 6வது உலக நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கும்.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை புவிசுற்று வட்டப்பாதையில் செலுத்துவதில் க்ரையோஜெனிக் என்ஜின் முக்கியப் பங்கை வகிக்கிறது.
இந்த ராக்கெட் ஏவப்படுவதற்கான 29 மணி நேர கவுண்ட்-டவுன் நேற்று காலை 11.27 மணிக்குத் தொடங்கியது.
அனைத்தும் சரியாக இயங்கியிருந்தால் ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் க்ரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் இயங்கியிருக்கும்.
இந்த ராக்கெட் செலுத்த இருந்த 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோளில், கே பேண்ட் டிரான்ஸ்பாண்டர், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய ககன் பேண்ட்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
கே பேண்ட் டிரான்ஸ்பாண்டரில் உள்ள 8 பீம்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கவும் மேம்பட்ட டிஜிட்டல் சிக்னல்களை வழங்கியிருக்கவும் முடியும்.
ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ககன் பேண்ட்கள், விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த உதவியிருக்கம். ஆனால், ராக்கெட்டுடன் சேர்ந்து இந்த செயற்கைக் கோளும் இழக்கப்பட்டுவிட்டது.
க்ரையொஜெனிக் என்ஜின் என்றால் என்ன?:
திட அல்லது திரவ எரிபொருள்களால் ஆன ராக்கெட்டுகளைத் தான் இதுவரை இந்தியா ஏவி வந்துள்ளது. இந்த ராக்கெட்டுகளால் செயற்கைக் கோள்களை சில நூறு கி.மீ. உயரம் வரை தான் ஏவ முடியும்.
இந்த செயற்கைக் கோள்களை ஆய்வுப் பணிக்குத் தான் பயன்படுத்த முடியுமே தவிர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியாது.
பூமியில் இருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோளை ஏவினால் தான் அது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வளவு உயரத்தில் செயற்கைக் கோளை விண்ணில் ஏவ அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அதற்கு ராக்கெட்டில் பொறுத்த மிக சக்தி வாய்ந்த என்ஜின் தேவை.
இது தான் க்ரையோஜெனிக் என்ஜின். இது திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை எரிபொருளாகக் கொணடு இயங்கும் என்ஜினாகும்.
இந்த என்ஜினை பல ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யா நமக்கு வழங்க இருந்தது. ஆனால், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்காவின் முயற்சியால் விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் இந்தியாவுக்கு இந்த தொழில்நுட்பம் கிடைப்பதை தடுத்துவிட்டது.
இதையடுத்து இதை இந்தியாவே உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இதை உருவாக்கியது.
இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் -183 டிகிரி செல்சியசுக்கு குளிரூட்டப்பட்டு திரவ நிலையில் இருக்கும். அதே போல ஹைட்ரஜன் -253 டிகிரி குளிரூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்பமடைவதைத் தவிர்க்க இந்த ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் திரட எரிபொருள கலவையை ராக்கெட் ஏவப்படும் சில மணி நேரங்களுக்கு முன் தான் நிரப்ப வேண்டும். ராக்கெட் கிளம்புவதற்கு 30 நொடிகள் இருக்கும் வரை எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications