கோவையில் தொழிற்சங்க விவகாரம் - வைகோ உண்ணாவிரத போராட்டம்
கோவை: தொழிற்சங்கத்தை கைப்பற்றியதை கண்டித்து கோவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சு.துரைசாமி இதற்கு தலைவராக இருந்தார்.
கடந்த 1972ம் ஆண்டு கோவை டாடாபாத் மூன்றாம் வீதியில் தற்போதைய தொழிற்சங்க கட்டிடம் வாங்கப்பட்டு தலைமை சங்க அலுவலகமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இதையடுத்து 1994ம் ஆண்டு மதிமுக தொடங்கப்பட்ட போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியுடன் இணைக்கப்பட்டு தொழிலாளர்களுக்காக தொடர்ந்து இயங்கி வந்தது.
இந்த சங்கத்திற்கு உரிமை கொண்டாடி திமுகவை சேர்ந்த எல்பிஎப் சங்கத்தினர் 1994ம் ஆண்டு கோவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கில் சு.துரைசாமி தலைமையிலான சங்கத்திற்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எல்.பி.எப். சங்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
அந்த வழக்கிலும் சு.துரைசாமி தலைமையிலான சங்கத்திற்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எல்.பி.எப். சங்கத்தினரும், தி.மு.க.வினரும் அத்துமீறி உள்ளே நுழைந்து சங்கத்தை கைப்பற்றி உள்ளனர்.
இதை கண்டித்து கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications