ஐபிஎல் கொச்சி சர்ச்சை- லலித் மோடியின் அதிகாரத்தைக் குறைக்க பிசிசிஐ முடிவு
டெல்லி: லலித் மோடியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அவரை டம்மியாக்கும் வகையில், அதிகாரங்களைக் குறைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் ஐபிஎல்லின் இணை ஆணையராகப் பணியாற்றப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டதுதான் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக். இதன் ஆணையராக நியமிக்கப்பட்டவர் மோடி. தற்போது ஐபிஎல் கொச்சி பிரச்சினையில் மோடியின் தலை உருளுகிறது.
இது போதாதென்று ஐபிஎல் வர்த்தகத்தில் மோடியின் உறவினர்களின் ஆதிக்கமும் இருப்பதாக பெரும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மோடி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மோடியிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், அவருக்கு ஒரு செக் வைக்கும் வகையில், ஐபிஎல்லின் இணை ஆணையராக கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகர் செயல்படவுள்ளார்.
வருகிற 24ம் தேதி கிரிக்கெட வாரிய செயல் குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போது இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது.
ஐபிஎல் தலைமை அலுவலகத்தில் நடந்த வருமான வரிச் சோதனையால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மோடியின் செயல்பாடுகளால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அது கருதுகிறது. மேலும் சசி தரூருக்கும், மோடிக்கும் இடையிலான மோதலும் கிரிக்கெட் வாரியத்தை அப்செட் ஆக்கியுள்ளது.
கிரிக்கெட் வாரிய செயல் குழுவில் உள்ளவர்களில் ஐ.எஸ்.பிந்த்ராவைத் தவிர மற்ற அனைவருமே மோடிக்கு எதிராக திரண்டுள்ளனராம்.
இதையடுத்து ஐபிஎல் அலங்கோலத்தை சரி செய்ய களத்தல் குதிக்கிறது கிரிக்கெட் வாரியம். மேலும் எதிர்காலத்தில் அணிகளின் ஏல விவகாரத்தில் எந்தவிக்க் குழப்பமும் ஏற்படாத வகையில் பல்வேறு வெளிப்படையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாம்.
முன்னதாக ட்விட்டரில் ஐபிஎல் கொச்சி அணியின் பங்குதாரர்கள் குறித்த விவரங்களை மோடி வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்த மனோகர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் மோடியை கடுமையாக அவர் சாடியிருந்தார்.
அதில், உங்களது செயல் மிகவும் கடுமையான ரகசியக் காப்பு விதி மீறலாகும். ஒரு வாரியத்தின் துணைக் கமிட்டியின் தலைவர் பதவியில் இருப்போர் செய்யக் கூடிய செயல் அல்ல இது.
இது நாள் வரை நிர்வாகக் குழுவில் கூட விவாதிக்காமல், தெரிவிக்காமல் பல முக்கிய விஷயங்களை நீங்கள் பகிரங்கமாக வெளியிட்டு வந்துள்ளீர்கள். ஐபிஎல் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கக் கூடிய நிர்வாகக் குழு இருக்கும்போது அதைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவது சரியல்ல என்று மனோகர் கடுமையாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications