கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி – 2 பெண்கள் உள்பட மூவருக்கு வலை வீச்சு
பாவூர்சத்திரம்: ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.1 லட்சம் வரை மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள திரவியம் நகர் எல்லைபுளியை சேர்ந்தவர் ராமசாமி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஒருவருடத்திற்கு முன்பு திப்பணம் பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி உமாபார்வதி, பெத்தநாடார்பட்டியை சேர்ந்த சமுத்திரம் மகள் விநாயகி ஆகிய இருவரும் மத்திய அரசி்ன் கேவிஐசி என்ற நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று தருகிறோம். அதற்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கடன் கிடைக்கும் ஆசையில் ராமசாமி 30 ஆயிரமும், சீதாராமன் பட்டியை சேர்ந்த ரமேஷ் 30 ஆயிரமும், அரியபுரத்தை அயோத்திராமன் 21 ஆயிரமும், முருகன் 8 ஆயிரமும், முத்துக்கனி 6 ஆயிரமும், செங்காநல்லூர் கோட்டி முத்து 12 ஆயிரமும் என 1 லட்சத்து 7 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.
ஒரு வருடம் ஆகியும் கடன் பற்றி எந்த தகவலும் வராததால் ராமசாமி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக பாவூர்சத்திரம் போலீசார் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் 2.9.2009 தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்தனர்.
ஆனால் சொன்னபடி பணம் கொடுக்காமல் இருவரும் தலைமறைவாக இரு்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று உமாபாரதி வீட்டில் இருப்பதாக தகவல் தெரிந்த ராமசாமி அங்கு சென்று பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது உமா பார்வதியும் அவரது உறவினர் சந்திரசேகரும் பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை செய், இனி பணம் கேட்டு வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து ராமசாமி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் உமா பார்வதி, சந்திரசேகர், விநாயகி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications