பாரத் பந்த்-தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்-அதிமுக கூட்டணி
சென்னை: விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள பாரத் பந்த் போராட்டத்தை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அதிமுக, மதிமுக, இடசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக வரும் 22, 23, 24ம் தேதிகளில் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பந்த் தொடர்பாக ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந் நிலையில் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
திமுகவும் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைபிடித்து வரும் தாராளமய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியது. நூல் விலை உயர்ந்ததன் காரணமாக ஜவுளித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உரத்திற்கு அளித்து வந்த மானியம் ரூ.3,000 கோடியை குறைத்ததோடு உர விலை மீதான கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியதால் உர விலையும் உயர்ந்து விட்டது.
இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த விலைவாசி உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றனர். எனவே, ஒருமித்தக் கருத்துடைய கட்சிகள் 12.4.2010 அன்று டெல்லியில் கூடி, விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எதிர்த்து 27.4.2010 அன்று தேசிய அளவில் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை எதிர்த்து 27.4.2010 அன்று நடைபெறும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
மேலும், அனைத்து வியாபாரிகளும், தொழிற்சங்க அமைப்புகளும், வாகன உரிமையாளர்களும் மற்றும் அனைத்து பகுதி உழைப்பாளி மக்களும், இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பங்கேற்கச் செய்வும் வகையில் தமிழகம் முழுவதும் 22, 23, 24ம் தேதிகளில் பிரசாரப் பொதுக் கூட்டங்களை அதிமுகவினர் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளர்.
சென்னையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications