போலீஸ் நிலையத்தில் சபதம் போட்டு கொலை-5 பேர் கைது
சென்னை:போலீஸ் நிலையத்தில் சபதமிட்டு ரியல் எஸ்டேட் புரோக்கரை கொலை செய்த அவரது நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சாஸ்திரி நகர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (34 ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தார்.
போதைக்கு அடிமையான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சாஸ்திரிநகர் 10வது குறுக்குத் தெருவில் உதயகுமார் தலையில் காயத்தோடு பிணமாகக் கிடந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக அவரது நண்பர்களான செந்தில், மகி என்ற மகிமைதாஸ், ரமேஷ், ஸ்ரீதர், பலராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் உதயகுமாருக்கு நல்ல கமிஷன் கிடைத்து வந்ததால் இந்த 5 பேரும் அவருடன் நெருக்கமாக இருந்து மது, போதை என்று ஜாலியாக இருந்தனர்.
இந் நிலையில் உதய குமாரின் ரூ.15 ஆயிரம் கமிஷன் தொகையை இந்த 5 பேரும் சேர்ந்து செலவழித்துவிட்டதால் தகராறு ஏற்பட்டது.
அப்போது செந்திலை உதயகுமார் அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடையாறு, சாஸ்திரிநகர் போலீஸ் நிலையங்களில் இரு தரப்பினரும் புகார்கள் தந்து விசாரணை நடந்துள்ளது.
உதயகுமார் அடித்துவிட்டதால் அவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று செந்தில் போலீஸ் நிலையத்திலே சபதம் செய்துள்ளான்.
இந் நிலையி்ல் கடந்த 14ம் தேதி இரவு உதயகுமாருக்கு 5 பேரும் மது வாங்கி கொடுத்து மயக்கத்தில் இருந்த அவரை கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்துபோனது இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications