ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கு- மனு சர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி

கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி டெல்லி ஹோட்டல் ஒன்றில், ஜெஸ்ஸிகா லால் விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். அந்த ஹோட்டல் டிசைனர் பினா ரமணிக்குச் சொந்தமானதாகும். அப்போது அங்கு வந்த மனு சர்மா, மது அருந்த வருமாறு ஜெஸ்ஸிகாவை அழைத்தார். அதற்கு ஜெஸ்ஸிகா மறுக்கவே தனது துப்பாக்கியால் ஜெஸ்ஸிகாவை சுட்டு விட்டார் மனு சர்மா. இதில் ஜெஸ்ஸிகா படுகாயமடைந்தார். அவரை பினா ரமணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் ஏற்கனவே ஜெஸ்ஸிகா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
2 நாட்கள் கழித்து மனு சர்மாவின் டாடா சபாரி கார் நோய்டா பகுதியில் அனாதையாக நின்றது. பின்னர் மனு சர்மா சில நாட்களில் போலீஸில் சரணடைந்தார். ஆனால் தான் ஜெஸ்ஸிகாவைக் கொல்லவில்லை என்று அவர் மறுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட் மனு சர்மாவை விடுவித்து 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து மனு சர்மா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சந்தேகத்திற்கிடமின்றி மனு சர்மா மீதான புகார்களை போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது. எனவே மனு சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஜெஸ்ஸிகாவின் சகோதரி சப்ரீனா லால் கூறுகையில், எனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த்த் தீர்ப்பு எங்களை திருப்திப்படுத்தியுள்ளது என்றார்.
தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகையில், மனு சர்மாவுக்கு நான்தான் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தேன். தற்போது அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கறது.
மீடியாக்கள்தான் நீதி நிலை நாட்டப்பட்டதற்கு முக்கியக் காரணம். அவர்களால்தான் குற்றவாளி எந்த நிலையிலும் தப்ப முடியாமல் போனது என்றார்.
மனு சர்மா, முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications