சங்கரன்கோவிலில் நாளை முதல் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்
சங்கரன்கோவில்: பருத்தி ஏற்றுமதிக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவிலில் நாளை முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மாவு போடுவது, நூல் வைண்டிங் செய்தல், சாயம் முக்குதல், துணி நெய்தல் போன்ற பல பிரிவுகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் நூல் விலை அடிக்கடி உயர்வதும், போதுமான நூல்கள் கிடைக்காமலும் தட்டுபாடு நிலவி வருகிறது. அதோடு தொடர் மின்தடையால் விசைத்தறி கூடங்களை இயங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே கூடங்களை இழுத்து மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பருத்தி நூல் ஏற்றுமதிக்கான ஊக்க தொகையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுபாடு விதிக்க வேண்டும் என்றும் கழிவு பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 19ம் தேதி முதல் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications