தரூரைக் காக்க ரூ. 70 கோடி பங்குகளைக் கைவிட முன்வந்த சுனந்தா
டெல்லி: சசி தரூரின் பதவியைக் காப்பாற்ற கடுமையாக முயன்றார் அவரது தோழியான சுனந்தா. அதற்காக ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகளை கைவிட்டு விடவும் அவர் முன்வந்தார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
சுனந்தா புஷ்கர் மற்றும் ஐபிஎல் கொச்சி ஆகிய இரு விஷயங்களும் தரூரின் பதவிக்கு வேட்டு வைத்து விட்டன.
சுனந்தா முக்கியப் பங்குதாரராக உள்ள ரெண்டஸ்வஸ் நிறுவனம்தான் ஐபிஎல் கொச்சி அணியை வாங்கியுள்ளது. ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில், சுனந்தாவுக்கு 19 சதவீத இலவசப் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும். சுனந்தாவுக்கு ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் மொத்தம் உள்ள பங்குகளின் மதிப்பு 25 சதவீதமாகும். இதில் 19 சதவீதத்தை அது தானம் போல வழங்கியது.
இதுதான் பிரச்சினையாகி விட்டது. சுனந்தாவுக்காக ஐபிஎல் கொச்சி அணியை வாங்க கடுமையாக உழைத்தார் தரூர் என்பதால்தான் அவருக்குப் பிரச்சினையாகி விட்டது. சுனந்தா, தரூரின் பினாமி என்றும் புகார் கிளம்பி விட்டது.
இதை மறுத்தார் சுனந்தா. நான் பினாமி அல்ல என்றார். இருந்தும் தரூர் மீதான நெருக்கடி முற்றியதால் நேற்று அவர் ராஜினாமா செய்து விட்டார்.
முன்னதாக தரூரின் பதவியைக் காப்பாற்ற சுனந்தா கடுமையாக முயன்றார். தனக்கு ரெண்டஸ்வஸ் நிறுவனம் வழங்கிய 19 சதவீத இலவசப் பங்குகளை திருப்பித் தந்து விடுவதாக கூட அவர் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கும் அவர் கடிதம் எழுதினார்.
இதுகுறித்து சுனந்தாவின் அறிக்கையை அவரது வக்கீல் ஆசிஷ் மேத்தா வாசிக்கையில், ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாக சேவைக்காக எனக்கு அந்த நிறுவனம் கொடுத்த பங்குகள்தான் இந்த 19 சதவீத இலவசப் பங்குகள்.
ஆனால் இதை எதிர்பார்த்து நான் எந்த சேவையையும் அவர்களுக்குச் செய்யவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக நான் தொழில் மற்றும் நிதித்துறையில் இருக்கிறேன். ஆனால் சமீபத்திய சர்ச்சைகள் எனது பெயருக்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளதுய
இந்த நிலைமைக்குப் பிறகு என்னால் எதிர்காலத்தில் ஐபிஎல்லுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கருதுகிறேன். எனவே எனக்கு வழங்கப்பட்ட 19 சதவீத இலவசப் பங்குகளையும் திருப்பித் தருகிறேன் என்று கூறியுள்ளார் சுனந்தா.
ஆனால் சுனந்தாவின் இந்த முயற்சி, தரூரின் பதவியைக் காக்கத் தவறி விட்டது.












Click it and Unblock the Notifications