சட்டசபையில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை: நூல் விலை உயர்வு தொடர்பான பிரச்சனையில் இன்று சட்டசபையில் இருந்து அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நூல் விலை உயர்வு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
இதில் செ.ம.வேலுச்சாமி (அதிமுக), ஞானசேகரன் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.), ராமசாமி (இந்திய கம்யூனி்ஸ்ட்.), ஞானதாஸ் (மதிமுக) ஆகியோர் பேசினார்.
அப்போது பஞ்சு ஏற்றுமதியை அனுமதிக்கக்கூடாது. நூலுக்கு மானியம் வழங்க வேண்டும், தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், நூல் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை, நெசவாளர்களுக்கு ஊக்க தொகை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன்,
கடந்த 2 ஆண்டுகளாக நூல் விலை உயர்வு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக முதல்வசர் கருணாநிதி மத்திய அரசுக்கு கவலையோடு பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார். மத்திய அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,898 நூற்பாலைகள் உள்ளன. இது இந்தியாவில் உள்ள மொத்த நூற்பாலைகளில் பாதிக்கும் அதிகம். தமிழ்நாட்டுக்கு மொத்தம் 95 லட்சம் “பேல்" பஞ்சு தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 5 லட்சம் “பேல்" பஞ்சு தான் உற்பத்தியாகிறது.
மீதம் தேவையான பஞ்சை பருத்தி அதிகம் விளையும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் வாங்க வேண்டி இருக்கிறது. அங்கு விவசாயிகள் பருத்திக்கு அதிக விலை கேட்டு போராட்டம் நடத்துவதால் பஞ்சை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை உருவானது.
பஞ்சு தட்டுப்பாடு காரணமாக பஞ்சு, நூல் விலை உயர்ந்துள்ளது. தற்போது உலக அளவில் பஞ்சு உற்பத்தி குறைந்து விட்டதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நூல் விலையை குறைக்க பஞ்சாலை அதிபர்களை அழைத்துப் பேசினோம். ஆனால் பஞ்சு விலை அதிகமாக இருப்பதால் நூல் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறி விட்டனர்.
என்றாலும் முதல்வர் பருத்தி, நூல் விலையை குறைக்க தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.
கடந்த 6ம் தேதி மத்திய நிதியமைச்சர் தலைமையில் மத்திய அரசு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில் நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதன் காரணமாக நூல் விலை சிறிதளவு குறைந்துள்ளது. நூல் மற்றும் பஞ்சு விலையை குறைப்பதற்கான முழு அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது.
என்றாலும் மாநில அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து பஞ்சு, நூல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.
ஆனால், அமைச்சரின் பதில் திருப்பி அளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் மற்றும் மதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.
பி்ன்னர் அவைக்கு வெளியே அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications