வியாபாரியிடம் ரூ.1.30 லட்சம் மோசடி - மந்திரவாதி சிக்கினார்
சுரண்டை: சுரண்டை அருகே வியாபாரியிடம் ரூ. 1.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட மந்திரவாதி சிக்கினார்.
சுரண்டை அருகே உள்ள மேலபட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் வியாபாரி கிருஷ்ணன். இவர் தனது வீட்டில் இரு வாரங்களுக்கு முன் மந்திரவாதி ராம்ராஜ் என்பவர் மூலம் பரிகார பூஜை நடத்தினார். அப்போது அவரது வீட்டில் இருந்த ரூ.1.30 லட்சத்தை மந்திரவாதி ராம்ராஜூம் அவரது நண்பர் ஐயப்பனும் திருடி சென்று விட்டதாக சம்பவர் வடகரை போலீசில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐயப்பன் பிடிபட்டார். தலைமறைவான மந்திரவாதி ராம்ராஜை நேற்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசாரிடம் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம்...
நான் கேரளாவுக்கு அடிக்கடி செல்லும்போது கீழப்புலியூர் ஐயப்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. பணத்தேவை காரணமாக கள்ள நோட்டு ஆசைக்காட்டி ஏமாற்ற முடிவு செய்தேன்.
இதற்காக தென்காசி, கடையநல்லூர், அச்சன்புதூர், புளியங்குடி, சுரண்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரோக்கர் மூலம் முதலில் நல்ல நோட்டை கொடுத்து பொதுமக்களிடம் ஆசை காட்டுவோம். பின்னர் நல்ல ரூபாயை வாங்கி கொண்டு கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி விடுவோம். அந்த பணத்தை வைத்து டிஸ்கோதே கிளப், அழகிகளுடன் உல்லாசமாக இருந்து செலவழித்தோம்.
இந்நிலையில் மேலப்பாட்டாகுறிச்சியை சேர்ந்த வியாபாரி கிருஷ்ணன் அறிமுகமானார். அவரிடம் கள்ள நோட்டு என்று கூறி, நல்ல நோட்டுகள் ரூ.2 ஆயிரம் கொடுத்து மாற்றுமாறு கூறினோம். அதை அவர் மாற்றிய பின் ரூ.25 லட்சம் கள்ள நோட்டு கேட்டார்.
அதற்கு நாங்கள் ரூ.2 லட்சம் தருவதாக கூறினோம். இதை கொடுக்கும் முன் அவரது வீட்டில் பரிகார பூஜை நடத்துவது போல் நாடகமாடினோம். அப்போது அவர் தனது மனைவி வேலைக்காக பீரோவில் 1 லட்சத்து 30 ஆயிரம் வைத்திருப்பதாக தெரிவிக்கவே அதை திருடினோம்.
அதில் ரூ.70 ஆயிரம் தான் இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு வீ்ட்டில் கொள்ளையடிக்க சென்றபோது தாத்தாவையும், பேத்தியையும் கொன்றோம் என்று தெரிவித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications