நிலக்கரி சுரங்கம் நடத்தும் நக்சலைட்டுகள்
ராஞ்சி: பணம் சம்பாதிக்க ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நிலக்கரி சுரங்கம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர்ர், ஒரிஸ்ஸா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
வழக்கமாக இந்த மாநிலங்களில் பணக்காரர்களை மிரட்டியும், தொழிலாளர்களிடமும் நக்ஸல்கள் பணம் வசூலிப்பது தெரிந்ததே.
ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவர்களது கட்டுப்பாட்டில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பினாமிகள் மூலம் இதை நக்ஸல்கள் நடத்துகின்றனர்.
இது தவிர இந்த மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் 7 லட்சம் டன் அளவுக்கு நிலக்கரி கள்ளத்தனமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. இதிலும் நக்சலைட்டுகளே பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வருமானத்துக்கு இந்த நிலக்கரி சுரங்கள் பெரிதும் உதவி வருகின்றன.
மேலும் பிற சுரங்க தொழிலாளர்களிடம் நக்சலைட்டுகள் வரி என்ற பெயரிலும் பணம் வசூலி்த்து வருகின்றனர்.