கிராம மக்களுக்கு இலவச சர்க்கரை நோய், பி.பி பரிசோதனை
சென்னை: தமிழகத்தில் கிராம மக்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் பரிசோதனை செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:
கடந்த ஆண்டுகளில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு தமிழகத்தில் போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல, கிராம மக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயை படிப்படியாகக் குறைத்திடும் நோக்கத்தில் சிறப்புத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின்படி கிராம மக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டுபிடிக்கும் பணியில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவர்கள் மக்களை பரிசோதித்து மேற்கண்ட நோய்கள் உள்ளதா எனக் கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்குத் தேவையான குளுக்கோ மீட்டர் மற்றும் ரத்த அழுத்த மானி வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.5.76 கோடியில் செயல்படுத்தப்படும்.
அதே போல இப்போது வட்டார ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் இருப்பதை செமி ஆட்டோ அனலைசர் கருவிகள் மூலம் கண்டறிந்து, இந்த நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் நடப்பாண்டில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்துக்கும் மருந்துகள் மற்றும் ஆய்வுப் பொருள்கள் ரூ.1.73 கோடியில் வழங்கப்படும்.
அதேபோன்று பல் சுகாதாரம் பேணிட பல் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டமும் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பல் பரிசோதனை செய்யப்படும்.
பற்கள் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து, ஆரம்ப நிலையிலேயே பல் தொற்றினைச் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டம் ரூ.4.5 கோடியில் செயல்படுத்தப்படும். கடந்த 2009-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதியன்று, 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 25.85 லட்சம் மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்ட 1,60,903 மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
மாவட்டங்களில் யோகா மகப்பேறு பிரிவு:
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.
சுகப் பிரசவத்துக்கு யோகா மருத்துவ முறை சிறந்ததாக விளங்குகிறது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ரூ.59.19 லட்சம் செலவில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு பிரிவு தொடங்கப்படும்.
மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போது 38 ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.28.05 லட்சம் செலவில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications