சென்னை, பஞ்சாப், கொல்கத்தாவுடன் போட்டி முடிவுகள் ஃபிக்ஸ் செய்யப்பட்டதா?
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கெளரவ் பர்மன், ஐபிஎல் தலைவர் லலித் மோடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் தரம்சாலாவில் கடைசிப் போட்டி நடந்த்து. இதில் வென்றால்தான் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை இருந்தது. அதேசமயம், இப்போட்டியின் முடிவால் பஞ்சாபுக்கு எந்தப் பாதகமோ, சாதகமோ இல்லாத நிலை.
இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டியிலும் கொல்கத்தாவுக்குத்தான் அதிக நெருக்கடி இருந்தது.
இந்த நிலையில் இப்போட்டிகளின் முடிவுகள், சென்னை, கொல்கத்தாவுக்கு சாதகமாக இருப்பது போல மாற்றப்பட்டதாக, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் அணியின் உரிமையாளரான மோஹித் பர்மனின் தம்பி கெளரவ் பர்மனும் இதில் ஒரு உரிமையாளர். இந்த கெளரவ், மோடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் டோணியின் அபார ஆட்டத்தால் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. அதாவது கடைசி ஓவரில் டோணி அதிரடியாக ஆடி வெற்றி தேடிக் கொடுத்தார். இதுதான் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சென்னை அணி அரை இறுதிக்குள் நுழைய வசதியாக பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்களது தீவிரத்தைக் குறைத்துக கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மேட்ச் பிக்ஸிங் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த செய்திக்கு ஆஸ்திரேலிய வீரரும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனுமான கில்கிறைஸ்ட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.