கல்கி ஆசிரமத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை- கோர்ட்டில் அறிக்கை
சென்னை: கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்களுக்குப் போதைப் பொருட்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று ஆசிரம்ம் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில், கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள் கொடுத்து வசியப்படுத்துவதாகவும், சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு மனுதாக்கல் செய்து ஆசிரமம் பற்றிய செய்திகளை வெளியிட தடை கேட்டார்.
இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்து கல்கி பகவான் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரமம் சார்பில் வக்கீல் கோபால் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில்,கல்கி பகவான் ஆசிரமத்தில் எந்த மோசடியும் நடை பெறவில்லை. ஆன்மீக பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி, தியான பயிற்சி, அளிக்கப்படுகின்றன. வேதங்கள் சொல்லித் தரப்படுகின்றன. போதை வஸ்துக்களோ, குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்தோ இந்த ஆசிரமத்தில் கொடுப்பது கிடையாது.
இது தவறான குற்றச்சாட்டாகும். போதை பொருட்களுக்கு ஆசிரமம் எல்லையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து மே . 8ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.