மே 10ம் தேதிக்குள் பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட தீவிரம்
சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன் கூட்டியே அதாவது மே 10ம் தேதிக்குள் பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுகள் இயக்குநரகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கடந்த ஆண்டு மே 14ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட திட்டமிட்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஏழரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி 27-ந் தேதி தொடங்கியது. 44 மையங்களில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் உடனுக்குடன் சென்னை கிண்டி கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல்தொகுப்பு மையத்திற்கு (டேட்டா சென்டர்) அனுப்பப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முன்கூட்டியே மே 10ம் தேதிக்குள் வெளியிட தீர்மானித்துள்ளனர். இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்புவோர் மே 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். எனவே மே 5 முதல் 10ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதலும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 17ம் தேதி முதலும் வழங்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications