பொறியியல் கல்லூரிகளில் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்!
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பயிலும் மாணவர்கள் விரும்பினால் தமிழிலும் தேர்வு எழுதலாம். இதற்கு வசதியாக இனி வினாத் தாள்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழியிலும் இருக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சட்டசபையில் நடந்த உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பொன்முடி கூறுகையில்,
தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை முழுமையாக உயர்த்தியுள்ளோம் என்று கூற மாட்டேன். ஆனால், தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரத்தை உயர்த்த ஆங்கிலம், தமிழ் இரண்டும் தேவையாக உள்ளது.
வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அங்குள்ள மொழியைக் கற்றுக் கொண்டு தான் அந்த நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். அதே போல் வெளிநாட்டில் இருந்து இங்கு வருபவர்கள் இங்குள்ள மொழியைக் கற்றுக் கொள்ளலாம். அதற்கு ஒன்றும் தடையில்லை.
அதற்குப் பதிலாக இங்குள்ளவர்கள் வெளிநாடுகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்கு வசதியாக ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல.
வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு வேண்டுமானால் ஆங்கிலம் தேவையாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலத்தால் படிக்க முடியாத மற்ற மாணவர்கள், நன்றாக புரிந்து படித்து, முன்னேற ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது.
1972ம் ஆண்டிலேயே அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் வழியில் படிப்பு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு சில பேர் தடையாக இல்லாமல் இருந்திருந்தால் ஜெர்மனி, சீனாவைப் போல் தமிழகமும் சிறந்து விளங்கியிருக்கும்.
தமிழ் வழியில் பி.இ. படிப்பு வழங்கப்பட இருப்பதற்கு காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி தேவி கவலை தெரிவிக்கிறார். அவரது கவலை வேண்டுமானால் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் 6 சதவீதம் பேருக்கு பொருந்தலாம்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 2010-11 கல்வி ஆண்டு முதல் பி.இ. படிப்பில் சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ், ஆங்கிலம் வழிகளில் பாடங்கள் போதிக்கப்படும்.
தவிர, ஆங்கில வழியில் பொறியியல் படிக்கும் மாணவர்களும் கூட விரும்பினால் தமிழில் தேர்வு எழுதலாம். இதற்கு வசதியாக பொறியியல் படிப்புகளின் வினாத் தாள்கள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இருக்கும்.
வரும் ஆண்டுகளில் மேலும் பல பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் வழங்க வகை செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications