பி.இ. தகுதி மதிப்பெண்ணை 50% ஆக குறைக்க திட்டம்!
சென்னை: பொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச பிளஸ் டூ தேர்வு தகுதி மதிப்பெண்ணை 55 சதவீதத்திலுருந்து 50 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது பி.இ படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதை 50 சதவீதமாகக் குறைக்க அரசு பரீசீலித்து வருகிறது.
சட்டசபையில் உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
சந்திரகாசி (அதிமுக): அரசுக் கல்லூரிகளில் ஷிப்டு முறை தொடங்கியதில், போதுமான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் இல்லாத கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிவதால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தை கூறுபோட்டு எண்ணிக்கைக்காக உயர்த்தியிருக்கிறீர்களே தவிர தரத்தை உயர்த்தவில்லை. மாறுபட்ட பாடமுறை, குறைவான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றால் தொழிற்கல்வி மிகவும் தரம் தாழ்ந்து பொறியியல் பட்டதாரிகள் எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாவதைப் போல அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகளும் ஒரே மாதிரியான தரமான பாடத் திட்டத்துடன் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். இதன் காரணமாக மாணவர்களின் கல்வித் தரம் உயருவதுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வசதியாக இருக்கும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): மேல்தட்டு மக்கள் மட்டுமே உயர்கல்வி கற்றநிலை மாறி இப்போது கிராமப்புற மாணவர்கள் கூட அமெரிக்காவில் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமே முதுநிலை கல்வி வரை இலவசம் வழங்கப்படுகிறது. கேரளாவில் 10ம் வகுப்பு வரையும், மேற்கு வங்காளத்தில் பிளஸ்-2 வரையும், குஜராத்தில் 8ம் வகுப்பு வரையும் தான் இலவச கல்வி வழங்கப்படுகிறது.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): காங்கிரஸ் ஆளும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் எந்த வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது என்றும் கூற வேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ்: மத்திய அரசு கல்விக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.45,711 கோடி ஒதுக்கியுள்ளது.
சிவபுண்ணியம்: நான் மத்திய அரசின் சாதனையை கேட்கவில்லை. நாட்டின் மொத்த ஜி.டி.பி.யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை 6 சதவீதம் ஒதுக்கவில்லை.
பீட்டர் அல்போன்ஸ்: தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேருவது அதிகரித்துள்ளது. நுழைவுத் தேர்வு இருந்தபோது 24,670 கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 54,073 ஆக உயர்ந்துள்ளது.
கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் மேலும் அதிக எண்ணிக்கையில் சேரும் வகையில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை கொடுப்பதில்லை. அவர்களது ஆங்கிலப் பேச்சுப் புலமை போதுமானதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். கிராமப்புற மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.
ராஜா (பா.ம.க.): கிராமப்புறங்களில் இருக்கும் கல்லூரிகளில் போதிய ஆங்கில பேராசிரியர்கள் இல்லை. பின்னர் எப்படி கிராமப்புற மாணவர்கள் ஆங்கில புலமை பெறமுடியும், வேலைவாய்ப்பு பெறமுடியும். எனவே போதிய ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்த ஆண்டே தமிழில் கொண்டுவர வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: பி.இ. படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications