ஆம்பூர் அருகே விபத்தில் முன்னாள் காங். எம்.பி. பலி
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜெயமோகன் பலியானார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயமோகன் (59). சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் வாணியம்பாடி. அடிக்கடி வாணியம்பாடிக்கு சென்று வருவது வழக்கம். அதே போல் ஆம்னி பஸ்சில் வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
பஸ் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வேலூரை அடுத்த ஆம்பூர் வடபுதுப்பட்டு சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரி ஒன்று பஸ்சுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக லாரி மீது ஆம்னி பஸ் பலமாக மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஜெயமோகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ் டிரைவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (35) என்பவரும் உயிரிழந்தார்.
விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும், 2 பேர் ஆம்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆம்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயமோகன் 3 முறை திருப்பத்தூர் எம்.பி.யாக பதவி வகித்தவர். ஆரம்ப காலத்தில் வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
இவருக்கு மல்லிகேஸ்வரி என்ற மனைவியும், அனிதா என்ற மகளும், விஜய் இளஞ்செழியன் என்ற மகனும் உள்ளனர். மகள் அனிதா டாக்டராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் விஜய் இளஞ்செழியன் தற்போது நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications