களக்காடு அருகே போலீஸ்காரர் கொடூரக் கொலை
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைபுதூரை சேர்ந்தவர் பன்னீர். கிராம நிர்வாக அதிகாரி. இவரது மகன் ஜெயபிரகாஷ். இவருக்கும் கீழசாலைபுதூரை சேர்ந்த சிலருக்கும் கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் எதிரோலியாக கடந்த 2008ம் ஆண்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விஏஓ பன்னீரை சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதற்கு பழிக்கு பழியாக பன்னீர் மற்றும் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ், கோபால் என்ற கோபாலகிருஷ்ணன், மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கீழசாலைபுதூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரை கடந்த 30.3.2009ல் அரிவாளால் வெட்டி கொன்றனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
கோபாலகிருஷ்ணன் மணிமுத்தாறு ஆயுதபடையில் போலீஸ்காரராக பணிபுரி்ந்து வந்தார். முத்துராமலிங்கம் கொலை வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதால், பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முத்துராமலிங்கத்தின் மகன் மற்றும் சிலர் சேர்ந்து ஜெயபிரகாஷை கொலை செய்ய அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்தபோது போலீசில் சிக்கினர். இதையறிந்த பன்னீர் நடுச்சாலைபுதூர் வீட்டை காலி செய்து விட்டு மாவடியில் குடும்பத்துடன் குடியேறினார். கடந்த 30ம் தேதி முத்துராமலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நடந்தது.
இதில் பங்கேற்ற சிலர் பன்னீர் குடும்பத்தினரை பழி வாங்குவோம் என்று ரகசியமாக சபதம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விபட்ட உளவதுறையினர் பன்னீர் குடும்பத்தினரை கவனமுடன் இருக்கும்படி எச்சரித்தனர்.
இந்நிலையில் இன்று காலை கோபாலகிருஷ்ணன் மாவடிக்கு மேற்கே உள்ள வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்து சராமரியாக வெட்டியது. இதில் கோபாலகிருஷ்ணனின் வலது கை துண்டாகி கீழே விழுந்தது.
அதன்பிறகு அவர்கள் அந்த கையை தூக்கி கொண்டு சென்றுவிட்டனர். தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி போலீசார் சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் இறந்தார்.
இந்த சம்பவத்தால் மாவடி, நடுச்சாலைபுதூர், கீழசாலைபுதூர் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.