நாளை பாரத் பந்த்: தமிழகத்தி்ல் பஸ்-ரயில்கள் ஓடும்; கடைகள் திறந்திருக்கும்
சென்னை: தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 27) அதிமுக தலைமையில் மதிமுக, இடதுசாரிகள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்று அரசு அறிவித்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை பாஜக கூட்டணியில் இடம் பெறாத பிற எதிர்க் கட்சிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில் அதிமுக தலைமையில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்தவுள்ளன.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர்கள் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அறிவித்துவிட்டன. இதனால் நாளை கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்.
இந் நிலையில் பஸ், ரயில்களும் தமிழகத்தில் வழக்கம்போல் ஓடும் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகரப் பேருந்துகளும் மினி பஸ்களும் வழக்கம்போல் இயங்கும்.
அதே போல ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்று ரயில்வேத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று காவல்துறையும் அறிவித்துள்ளது.
டிஜிபி எச்சரிக்கை:
சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
நாளை எப்போதும் போல் பஸ்கள், ரயில்கள் ஓடும், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும், பொது மக்கள் கூடும் இடங்களிலும், கடை வீதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தினாலோ, பஸ்களை மறித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முழு அடைப்பையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர் ஆகியோரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications