கை கொடுத்தார் மாயா- எதிர்க்கட்சிகளின் வெட்டுத் தீர்மானம் தோல்வி
டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும் மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் இன்று எதி்ர்க் கட்சிகள் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சியின் புண்ணியத்தால் வெட்டுத் தீர்மானம்தோல்வியைத்தழுவியது.
பாஜக கூட்டணியும், 13 கட்சிகளின் ஆதரவுடன் இடதுசாரி கட்சிகளும் தனியாக வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தன.
இந்தத் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் தனது எம்பிக்கள் அனைவரும் அவையில் இருக்கும் அந்தக் கட்சிகள் உத்தரவிட்டிருந்தன.
அதே போல இந்தத் தீர்மானத்தை முறியடிக்க வசதியாக அனைத்து எம்பிக்களையும் அவையில் இருக்கச் செய்யுமாறு தனது கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.
இன்று மாலை இவை வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.அப்போது அரசுக்குஆதரவாக 246 வாக்குகளும், எதிராக 162 வாக்குகளும் கிடைத்தன.இதையடுத்து வெட்டுத்தீர்மானங்கள் தோல்வியடைந்தன.
வெட்டுத்தீர்மானத்திற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி வாக்களித்தது. இதனால் அரசு தப்பியது.
இதுகுறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உ.பி.முதல்வர் மாயாவதி, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது. தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள இது தான் மத்திய அரசுக்கு நல்ல தருணம். வெட்டு தீர்மானத்தை பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் புறக்கணிப்பார்கள்.
பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அலைகிறது. அவர்கள் கொள்கைகளில் கோளாறு உள்ளது. அவர்களுடன் நாங்கள் கை கோர்க்கமாட்டோம் என்றார்.
லோக்சபாவில் அமளி:
இந் நிலையில் இன்று காலை மக்களவை கூடியதும் விலைவாசி உயர்வுப் பிரச்சனையை பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எழுப்பின.
உறுப்பினர்களை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் மீரா குமார் தொடர்ந்து வலியுறுத்தியும் பயன் இல்லை. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அமளி- ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு:
அதே போல இதே பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவையில் (ராஜ்யசபா) ஏற்பட்ட அமளியால் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்ய்சபா இன்று முற்பகல் கூடியதும், விலைவாசி உயர்வுப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சிகளின் எம்.பிக்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டுவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அனுமதி மறுக்கவே அமளி அதிகமாகியது.
இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து விட்டு அவைத் தலைவர் அன்சாரி வெளியேறினார்.
மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.