அழகியை 'தட்டிச் சென்ற' முதியவர் கொடூரக் கொலை- பிணம் காட்டில் வீச்சு
சென்னை: தான் அனுபவித்த வந்த அழகியை தட்டிச் சென்ற 60 வயது முதியவரை படுகொலை செய்த ஸ்டுடியோ அதிபர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் போட்டு ஆந்திர காட்டில் போட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் செங்கல்வராயன் (60). 60 வயதான இவர் ஒரு தொழிலதிபர். துணிகளை மொத்தமாக தைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரை கடந்த 19-ந் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் பாலசுப்பிரமணியன் (28) பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. வனிதா உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. நாகஜோதி மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில் தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் செங்கல்வராயன் வீட்டின் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்திவரும் முரளி பாபு (35) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது செங்கல்வராயனை முரளிபாபு கொலை செய்தது தெரியவந்தது.
போலீஸாரிடம் முரளி பாபு அளித்த வாக்குமூலத்தில்,
நானும் செங்கல்வராயனும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு திருமணமாகி மோனிகா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ஆந்திரமாநிலம் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த பாரதி (23) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். மேலும், எனது ஸ்டுடியோவிற்கு மேல் முதல் மாடியில் சகல வசதிகளுடன் கூடிய சொகுசு அறை அமைத்து பாரதியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன்.
அப்போது பாரதி மற்றொரு அழகி லட்சுமி (24)யை செங்கல்வராயனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமியும் செங்கல்வராயனும் ஸ்டுடியோவின் மேல் உள்ள சொகுசு அறையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
லட்சுமிக்கு செங்கல்வராயன் அவரது சொந்த ஊரான வெங்கடாபுரத்தில் வீடு கட்டி கொடுத்தார். தான் அறிமுகப்படுத்திய லட்சுமிக்கு வீடுகட்டி கொடுத்து அவரை தொழிலதிபர் சந்தோஷமாக வைத்திருப்பதை கண்ட என்னுடைய கள்ளக்காதலியான பாரதி மனம் உடைந்து போனார்.
இதையடுத்து தானும் வசதியுடன் வாழ ஆசைப்பட்டு என்னிடமிருந்து விலகி செங்கல்வராயனுடன் நெருங்க ஆரம்பித்தார். என்னுடைய கள்ளக்காதலியை தொழிலதிபர் செங்கல்வராயன் தனது வலைக்குள் சிக்க வைத்திருப்பதை அறிந்த நான் செங்கல்வராயனை கொலை செய்ய திட்டம் போட்டேன்.
கடந்த 19-ந் தேதி பிற்பகல் வழக்கம்போல் செங்கல்வராயன் ஸ்டுடியோவின் மேல் உள்ள சொகுசு அறைக்கு சென்றார். அப்போது எனக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அப்போது நான் அவரை கத்தியால் குத்தினேன். இதில் அவர் பிணமானார்.
அவரது உடலை எப்படி அப்புறப்படுத்துவது என முதலில் குழம்பிப்போன நான் அவரது கை, கால்கள் மற்றும் தலையை தனித்தனியாக கத்தியால் வெட்டி துண்டு போட்டேன். பின்னர் உடலை மட்டும் கோணிப்பையில் வைத்து ஒரு மூட்டையாக கட்டினேன். பிறகு தலை, கை, கால்களை மற்றொரு மூட்டையாக கட்டினேன்.
இந்த 2 மூட்டைகளையும் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒன்றன் பின் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆந்திர மாநிலப்பகுதியான பாண்டூர்-வெங்கடாபுரம் ரோட்டில் உள்ள அனுமந்தையா காட்டில் வீசி விட்டு வந்தேன் என்றார்.
இதையடுத்து போலீஸார் காட்டுக்குச் சென்று உடலைத் தேடினர். தலை, உடலின் பிற பாகங்கள் கிடைக்கவில்லை. உடலின் சில பகுதிகள், பல், கை விரல்கள் ஆகியவை மட்டுமே கிடைத்தது. பின்னர் முரளி பாபுவையும் கைது செய்தனர் அவரது ஸடூடியோவை போலீஸார் சோதனை போட்டபோது சில ஆபாசப் பட சிடிக்கள் கிடைத்தன. இதையடுத்து பெண்களை வைத்து ஆபாசப் படம் எதையும் எடுத்து விற்றாரா முரளி பாபு என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.