பெண் பத்திரிக்கையாளர் கொலை- தாயார் கைது
ராஞ்சி: வேறு ஜாதியைச் சேர்ந்தவரைக் காதலித்த பெண் பத்திரிக்கையாளர் தலையணையால் மூச்சுத்திணறடித்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது தாயாரை போலீஸார் கைது செய்தனர்.
ராஞ்சியைச் சேர்ந்தவர் நிரூபமா பதக். 23 வயதான இவர் பத்திரிக்கையாளராக இருக்கிறார். வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார்.
இதற்கு நிரூபமா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இன்று காலை நிரூபமா தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். விரைந்து வந்த போலீஸார் நிரூபமாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், நிரூபமா தலையணையால் முகத்தை அழுத்தி, மூச்சுத் திணறடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நிரூபமாவின் தந்தை, தாயார், இரு சகோதரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் அவரது தாயார்தான் மகளைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.