மும்பை ஸ்டிரைக்: மமதா விளக்கமளிக்க கோரி நாடாளுமன்றத்தில் அமளி – ஒத்திவைப்பு
டெல்லி: மும்பை ரயில் ஸ்டிரைக் தொடர்பாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம் அளிக்கக் கோரி லோக்சபாவில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக லோக்சபாவில் பெரும் அமளி நிலவி வந்த நிலையில் இன்று மும்பை ரயில் ஸ்டிரைக் பிரச்சினை சூட்டைக் கிளப்பியது.
இன்று காலை சபை கூடியதும் இந்தப் பிரச்சினையை பாஜக, சிவசேனா, இடதுசாரிஉறுப்பினர்கள் எழுப்பினர்.
மும்பையில் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஸ்டிரைக்கை ஒடுக்க எஸ்மாவை பயன்படுத்துவதற்கு இடதுசாரி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் பேசுகையில், மும்பையில் ரயில்கள் ஓடாவிட்டால் நாடாளுமன்றத்தையும் இயங்க விட மாட்டோம் என்று கூறினர்.
இதனால் பெரும் அமளி நிலவியதால், பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி தொடர்ந்தது.
பின்னர் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளித்தார். அப்போது பாஜக, சிவசேனா, இடதுசாரி உறுப்பினர்கள் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியை கடுமையாக சாடிப் பேசினர். மமதா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர்.
தொடர்ந்து பெரும் அமளியாக இருந்ததால், அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்து வெளியேறினார்.












Click it and Unblock the Notifications