யார் இந்த அஜ்மல் அமீர் கசாப்
மும்பை: கொடும் தீவிரவாத செயலில் ஈடுபட்டு இப்போது மரணத்தின் வாசலில் நிற்கும் அஜ்மல் கசாப்பின் வாழ்க்கை குறித்த ஒரு பார்வை...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஓகாரா மாவட்டம், பரீத்கோட் கிராமத்தில் 1987ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பிறந்தவன் கசாப்.
மிக மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் கசாப். இவனுடைய தந்தை தஹி பூரி வியாபாரம் செய்து வந்தார். கசாப்பின் அண்ணன் அப்சல் கசாப், லாகூரில் கூலித் தொழிலாளியாக உள்ளார்.
மூத்த சகோதரி ருகையாஹூசேன். பரீத்கோட்டிலேயே திருமணமாகி வசித்து வருகிறார். தங்கை சுரய்யா, தம்பி முனீர் ஆகியோர் பெற்றோருடன் பரீத்கோட்டில் வசித்து வருகின்றனர்.
ஆரம்ப காலத்தில் லாகூரில் சில காலம் தனது அண்ணனுடன் இருந்தான் கசாப். பின்னர் பரீத்கோட் திரும்பினான்.
2005ம் ஆண்டு ரம்ஜானுக்கு புத்தாடை வாங்கித் தருமாறுகோரி தனது தந்தையுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் கசாப். ஆனால் புத்தாடை வாங்கித் தர தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார் தந்தை. இதனால் வீட்டை விட்டு வெளியேறினான் கசாப்.
பின்னர் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட ஆரம்பித்தான். தனது நண்பர் முசாபர் கானுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்தான். 2007ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பக்ரீத்தின்போது ராவல்பிணிடியில் வைத்து லஷ்கர் இ தொய்பாவின் மறு உருவமான ஜமாத் உத் தவா அமைப்பினருடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டான் கசாப்.
பின்னர் லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாமில் சேர முடிவு செய்தான். இதையடுத்து மர்கஸ் தய்பா என்ற இடத்தில் பயிற்சிக்குச் சென்றான் கசாப்.
தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு வெளியேறிய கசாப் இன்று மும்பையில் மிகக் கொடிய சம்பவத்தை நிகழ்த்தி விட்டு மரணத்தின் வாயிலுக்கு வந்து நிற்கிறான்.
இதுவரை ரூ.35 கோடி செலவு:
கசாப்பை மும்பையில் சிறையில் வைத்துப் பாதுகாக்க மகாராஷ்டிர அரசு இதுவரை ரூ. 35 கோடியை செலவிட்டுள்ளது.
பிடிபட்ட நாள் முதல் இதுவரை அவனுக்காக மட்டும் தினசரி கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டு வருகிறதாம்.
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் கசாப்புக்காகவே தனி அறையை உருவாக்கியுள்ளனர். குண்டுதுளைக்காத அறையாகும் இது. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications