தமிழகத்துக்கு 2.5 லட்சம் டன் கூடுதல் அரிசி-மத்திய அரசு ஒதுக்கீடு
சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தமிழ்நாட்டுக்கு 2 .5 லட்சம் டன் கூடுதல் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் எழுப்பிய கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்:
தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது. அதில் மத்திய அரசு 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி வழங்குகிறது.
மீதி அரிசியை மத்திய அரசு வெளிச் சந்தை விலைக்கு வழங்குகிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குவதால் மாதந்தோறும் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் டன் கூடுதல் அரிசி தேவைப்படுகிறது. ஆண்டு முழுவதும் 2 லட்சத்து 37 ஆயிரம் டன் அரிசி கூடுதலாகத் தேவைப்படுகிறது.
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
3ம் தேதி இந்தக் கோரிக்கை விடப்பட்டது. 4ம் தேதியே கூடுதல் அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுவிட்டது.
பீட்டர் அல்போன்ஸ்: முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக எவ்வளவு அரிசி வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் கருணாநிதி: டெல்லியிலிருந்து நேற்றைக்கு முன் தினம் நான் திரும்பிய செய்தி உங்களுக்கெல்லாம் தெரியும். நேற்றைக்கு முன்தினம் நான் டெல்லியிலே காங்கிரஸ் கட்சியினுடைய தலைவி சோனியா காந்தியை சந்திக்கும் போது, தமிழ்நாட்டினுடைய அரிசி தேவையை எடுத்துச் சொன்னேன். அவர்கள் அதைப்பற்றிக் கவனிப்பதாகக் காலையிலே சொன்னார்கள்.
நான் நேற்றைய முன் தினம் மாலையில் இங்கு வந்து சேர்ந்தேன். நான் வருவதற்கு முன்பாகவே அரிசி அனுப்பப்பட்டது என்ற செய்தி இங்கே வந்து விட்டது.
அரிசி எவ்வளவு வந்தது என்று பீட்டர் அல்போன்ஸ் கேட்டார். மொத்தமாக வந்த அரிசி 2 லட்சத்து 50 ஆயிரம் டன், 65 ஆயிரம் டன் கோதுமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்:
இதையடுத்து சட்டசபையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, மின் கட்டணத்தை உயர்த்தப் போவதும் இல்லை. இலவச மின்சாரத்தை ரத்து செய்யப் போவதும் இல்லை. இதை வைத்து போராட்டம் நடத்தலாம் என்ற உறுப்பினரின் கனவு பலிக்காது என்றார்.












Click it and Unblock the Notifications