விபசார வேட்டைக்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கும்பல்
சென்னை: சென்னையில் விபச்சார வேட்டைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.
சென்னை திருமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார். இவர் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்கும் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு மோட்டார் சைக்கிளை திருடும் கும்பலைச் சேர்ந்த சிலர் கிண்டியில் பதுங்கியிருப்பதாக சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரும், மற்றொரு போலீஸ்காரரும் மோட்டார் சைக்கிளில் கிண்டிக்கு விரைந்தனர். ஆனால் அங்கு மோட்டார் சைக்கிள் திருடர்கள் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து திருமங்கலம் திரும்பி இருவரும் கிண்டி தொழிற்பேட்டை நூறடி சாலை சந்திப்பில் சாலையோரம் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த கார் அருகே சென்றனர்.
காரில் இருந்த 2 ஆண்கள் மற்றும் 3 பெண்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசவே காரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளை மற்றொரு போலீஸ்காரரிடம் கொடுத்துவிட்டு காரில் ஏறினார் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார். காரை கிண்டி காவல் நிலையத்திற்கு ஓட்டுமாறு டிரைவரிடம் கூறினார்.
ஆனால், காரை படுவேகத்தில் ஓட்டிய டிரைவர் அதை கிண்டி காவல் நிலையத்தில் நிறுத்தாமல் அடையாறு நோக்கி ஓட்டினார்.
இதையடுத்து டிரைவரை சிவக்குமார் தாக்கவே அண்ணா பல்கலைக்கழகம் அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கி ஓடினர். அதில் டிரைவரை மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் மடக்கிப் பிடித்தார்.
காரிலிருந்த இன்னொரு நபரும் 3 பெண்களும் தப்பியோடிவிட்டனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த விபச்சார புரோக்கர் சுஜித் கண்ணன் (30) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தப்பியோடிய நபரின் பெயர் மதன் என்றும் அவருடன் தப்பி சென்ற 3 பெண்களை வைத்து விபச்சாரம் நடச்சியதும் தெரிய வந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித் கண்ணனை கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் சப்இன்ஸ்பெக்டர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications