நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அனாதரவாக கிடந்த லன்ச் பாக்ஸால் பரபரப்பு
நியூயார்க்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில் அனாதரவாக விடப்பட்டிருந்த லன்ச் பாக்ஸால் வெடிகுண்டு பீதி கிளம்பியது. இதையடுத்து சதுக்கத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டைம்ஸ் சதுக்கப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில்,நேற்று அங்குகிடந்த ஒரு மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 7வது அவென்யூவின் பல பகுதிகள் மூடப்பட்டன. ஆட்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த மர்மப் பொருளை சோதனையிட்டனர்.
பாதுகாப்பு கவச உடைகளுடன், முகாமிட்ட நிபுணர்கள், மர்மப் பொருளை கவனத்துடன் பிரித்துப் பார்த்தபோது அது ஒரு லன்ச் பாக்ஸ் என்று தெரிய வந்தது. அதனுள் ஒரு வாட்டர் பாட்டிலும் இருந்தது. வேறு எதுவும் அதில் இல்லை.
இதையடுத்து பரபரப்பு அடங்கியது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் இதுவரை 11 தாக்குதல் சதித் திட்டங்களை நியூயார்க் போலீஸ் முறியடித்துள்ளதாக நியூயார்க் போலீஸ் கமிஷனர் ரே கெல்லி கூறியுள்ளார்.
தீவிரவாதம்... பாக்.குக்கு அமெரிக்கா எச்சரிக்கை:
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கார் குண்டுவெடிப்பு வெற்றி பெற்றிருந்தால், பாகிஸ்தானின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், அந்த நாடு கடும் விளைவுகளை சந்தித்திருக்கும் என்று அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானிடமிருந்து நாங்கள் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.
நியூயார்க்கில் வைக்கப்பட்ட கார் குண்டு வெடித்து, அது தொடர்பான விசாரணை பாகிஸ்தானில் போய் நின்றிருந்தால் அந்த நாடு கடும்விளைவுகளை சந்தித்திருக்கும். இதை பாகிஸ்தானுக்கே நாங்கள் தெரிவித்துள்ளோம் என்றார் ஹில்லாரி.
நியூயார்க் கார் குண்டுசம்பவத்தில் பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல் சஷாத் சிக்கியிருப்பது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானிதலிபான் மற்றும் காஷ்மீரி தீவிரவாத குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஹில்லாரி தொடர்ந்து கூறுகையில்,தீவிரவாதிகள் மீதான பாகிஸ்தானின் அணுகுமுறைகள் மாறியுள்ளன. முன்பு இரட்டை நிலையைத்தான் பாகிஸ்தான் கடைப்பிடித்து வந்தது. வாயில் ஒன்றும், செயலில் ஒன்றுமாக அது நடந்து வந்தது. இப்போது அப்படி இல்லை.
ஆனால் இதை விட அதிகமாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் இன்னும் அதிகமாக நடக்க வேண்டும் என்றார் ஹில்லாரி.












Click it and Unblock the Notifications