டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித்துக்கு கொலை மிரட்டல்- பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி காவல்துறைக்கு வியாழக்கிழமை இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் ஷீலாவின் உயிருக்கு அடுத்த 72 மணி நேரத்தில் ஆபத்து நேரும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் அந்த தொலைபேசி அழைப்பை விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் முதல்வரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக எம்.பிக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்?:
இந் நிலையில் பாஜக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரதாப் சிங் ரூடிக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ராஜ்யசபாவில் பாஜக எம்பி அலுவாலியா கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில்,
பீகார் மாநிலத்தில் வசந்த்பூரில் உள்ள பிரதாப் சிங் ரூடியின் வீட்டுக்கு செல்லும் சாலை மற்றும் பிற விவரங்கள் அடங்கிய வரைபடத்தை, மாவோயிஸ்டு தீவிரவாதி ஒருவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
எனவே அவருக்கும், அவரது வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாவோயிஸ்டுகளை எதிர்க்கும் அனைத்து எம்.பிக்களின் உயிருக்கும் மாவோயிஸ்டுகளால் ஆபத்து இருக்கிறது என்றார்.
இதையடுத்து அவரது பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.