உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சமயம்- ஆன்மீகம் பேச தடையில்லை- அன்பழகன்

முன்னாள் அமைச்சரும், கவிஞருமான கா.வேழவேந்தனின் 75-வது பவள விழாவை முன்னிட்டு, அவர் எழுதிய அண்ணாவும் பாவேந்தரும்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்கியதுடன் புத்தகத்தையும் வெளியிட்டார். அவரிடம் இருந்து புத்தகத்தை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் க.திருவாசகம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்தபோதே, அண்ணாவின் அன்பை பெற்றவர் வேழவேந்தன் ஆவார். அவர் சொல்படியே கவிதையும் எழுத தொடங்கினார். தமிழ் பற்று இல்லை என்றால் அரசியலில் மாறும் எண்ணம் வரும். ஆனால், வேழவேந்தன் தமிழ் மேல் கொண்ட பற்றால்தான் அரசியலில் மாறாமல் இருந்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசனுக்கு பின்னால், அவரைப்போல் கவிதை எழுதுபவர் வேழவேந்தன் தான். முன்பு எங்கு எல்லாம் வைதீகம் இருந்ததோ அங்கு எல்லாம் சுயமரியாதை இயக்கம் நுழைந்தது.
இன்றைக்கு தமிழுக்கு எதிராக உள்ளவர்கள் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பற்றி தவறாக பேசுகிறார்கள். இந்த மாநாட்டில், ஆன்மிகம், சமயங்கள் பற்றி பேச வழியிருக்காது என கூறுகிறார்கள்.
தமிழ் மொழியில் இல்லாத ஆன்மிகம் வேறு மொழியில் வந்துவிட முடியாது. கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சமயம்-ஆன்மிகம் பற்றி எந்த தடையும் இல்லை என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications