மேட்டுப்பாளையத்தில் சூறாவளியுடன் மழை: ராட்சத மரம் சரிந்து கோவை மாணவர்கள் 2 பேர் பலி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் ராட்சத மரம் சரிந்து அதன் கீழே நின்றிருந்த இரு கோவை மாணவர்கள் பலியாயினர்.
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சண்முகம், தண்டபாணி ஆகியோரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா சென்றனர்.
மேட்டுப்பாளையம்- குன்னூர் சாலையில் நடந்து வந்தபோது பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து அங்குள்ள ராட்சத மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர்.
அப்போது திடீரென மரம் வேருடன் சரிந்தது. இதில் மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சண்முகத்தின் மகன் அஜீத்குமார் (14), தண்டபாணியின் மகன் கார்த்திக் (16) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் வழியிலேயே இறந்தனர்.
மேலும் இந்த பயங்க சூறாவளி காற்று காரணமாக மேட்டுப்பாளையம் நகரின் காட்டூர், மகாதேவபுரம் உள்பட 12 இடங்களில் மரங்கள் சரிந்தன. இதில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
பாலப்பட்டி வேடர் காலனி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பிய்த்து எறியப்பட்டுவிட்டன.
ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதல்-3 பேர் பலி:
கரூர் அருகே விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூரை அடுத்த புலியூர் அருகே எஸ். வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (26). கூலி தொழிலாளி.
இதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர்கள் இருவரும் வேலாயுதம்பாளைத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்று விட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வேலாயுதம் பாளையம் ரவுண்டானா அருகே எதிரே வந்த டிராக்டர், அவர்கள் வந்த பைக் மீது மோதியதில், முருகேசன் பலத்த காயமடைந்தார்.
பாஸ்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, முருகேசனை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
இதனையடுத்து, இரவு 11 மணி அளவில் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் முருகேசனை கோவைக்கு கொண்டு சென்றனர்.
ஆம்புலன்சில் பாஸ்கர், முருகேசனின் தாய் செல்லம்மாள், சித்தி மகன் பெரியசாமி (27), மைத்துனர் சக்திவேல் (35), நர்ஸ் சசிகலா (27), மருத்துவமனை ஊழியர் பென்ட்ராஜ் (20) ஆகியோர் சென்றனர்.
தென்னிலை அருகே ஆம்புலன்ஸ் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் திடீரென ஆம்புலன்ஸ் மீது பயங்கர மாக மோதியது.
இதில் ஆம்புலன்ஸ் புதரில் கவிழ்ந்தது. அதில் இருந்த செல்லம்மாள், ஆம்புலன்ஸ் டிரைவர் பிரகாஷ் இரு வரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
முருகேசன் உள்பட ஆம்புலன்சில் இருந்தவர்களும் பஸ்சில் இருந்த 10 பயணிகளும் படுகாயமடைந்தனர்.
தகவல் கிடைத்து வந்த தென்னிலை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மற்றொரு ஆம்புலன்சில் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வழியிலேயே முருகேசன் இறந்து போனார். மற்ற 15 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications