காய்த்த மரம் தான் கல்லடி படும்-ஸ்டாலின்

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது:
இங்கு ஆளுங்கட்சியினரும், தோழமை கட்சியினரும் போலீஸ் பணிகளை பாராட்டி சிறப்பாக பேசினார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டன கணைகளை தொடுத்து பேசினார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
இந்த ஆட்சி அதை நிச்சயமாக அலட்சியப்படுத்தி விடாது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். அது உண்மைதான். சிறு சிறு சம்பவங்களை காரணம் காட்டி சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டதாக கூறி மாய தோற்றத்தை உருவாக்கி விடக்கூடாது.
கொலை- குற்ற நிகழ்வுகளை கண்டு பிடிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் 2009ல் 1 லட்சத்து 74 ஆயிரத்து 691 வழக்கு பதிவு செய்யப்பட்டதில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 200 வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல பொருட்களை மீட்பதிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
ரூ. 80 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதில் ரூ. 58 கோடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதே போல சொத்துக் கண்டுபிடிப்பு வழக்குகள் 79 சதவீதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொலை குற்றம் பட்டியலை விவரித்து பேசினார்கள். 2007ல் 1,521 கொலைகளும், 2008ல் 1630 கொலைகளும், 2009ல் 1,644 கொலைகளும் நடந்துள்ளன. இதில் உணர்ச்சிவசப்பட்டு நடந்த கொலைகள்தான் அதிகம்.
2009ல் நடந்த 1,644 கொலைகளில் 453 கொலைகள் குடும்ப சண்டை, வாய்தகராறில் நடந்துள்ளன. முன் பகையில் 272ம், காதல் வழக்குகளில் 117ம், நிலத் தகராறில்102 கொலைகளும் நடந்துள்ளது. பணம், லாபத்துக்காக நூற்றுக்கும் குறைவான கொலைகளே நடந்துள்ளன.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைவாகவே நடந்துள்ளன. 95 சதவீத குற்றவாளிகளை கண்டுபிடித்து இந்த அரசு கைது செய்துள்ளது.
.
இந்த அரசு பொறுப்பேற்றபின், கடந்த நான்கு ஆண்டுகளில், 15,084 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது 9,000 காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2010-2011ம் ஆண்டில், தமிழ்நாடு சீருடைக் காவல் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் 5,588 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications