ராஜா, மு.க.அழகிரி விவகாரம்- மே 30ல் திமுக உயர் நிலைக் கூட்டத்தில் விவாதம்
சென்னை: மே 30ம்தேதி கூடும் திமுக உயர்நிலை செயல் திட்டக் கமிட்டிக் கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ராஜா மற்றும் லோக்சபாவுக்கு தொடர்ந்து போகாமல்இருக்கும் மத்திய ரசாயண அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மிக மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க உயர் நிலை செயல் திட்டக் கூட்டத்தைக் கூட்டுவது திமுகவின் வழக்கம். அந்த வகையில் வருகிற 30ம் தேதி இக்கூட்டம் கூடும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்திருப்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் ராஜா மற்றும் மு.க.அழகிரி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதேபோல மு.க.அழகிரி அமைச்சரானதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட லோக்சபாவிலோ அல்லது ராஜ்யசபாவிலோ உறுப்பினர்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பலமுறை அழைத்தும் இதுவரை பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக அழகிரி ஆர்வம் காட்டாமலேயே உள்ளார்.
இந்த இரு விவகாரங்களிலும் திமுகவிடம் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இது குறித்தும் திமுக உயர்நிலை கூட்டத்தில் பேசப்படக் கூடும் என்று தெரிகிறது.
இன்னொன்று, கனிமொழி விரைவில் மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் கருணாநிதி சென்றிருந்தபோது இது இறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் இக் கூட்டத்தில் கனிமொழி குறித்தும் பேசப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் மாநில அமைச்சரவையிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.
இது தவிர ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார் அழகிரி:
இந் நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னரே மத்திய அமைச்சர் அழகிரி மாலத் தீவுக்கு
சென்றார் என்பது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது அவையில் அழகிரி இல்லை.
இந் நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பிய பின்னரே அவர் மாலத் தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 17ம் தேதி முதல் 22ம்ம் தேதி வரை மத்திய அமைச்சர் அழகிரி, தனிப்பட்ட முறையில் விடுமுறையில் மாலத் தீவு செல்வதாகவும், இதுதொடர்பாக பிரதமர்
அலுவலகத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்
விண்ணப்பித்தற்கு ரசாயனத்துறை அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பிரதமர் அலுவலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications