ராஜ்யசபா தேர்தல்-ஜெய்ராம் ரமேசுக்கு ஆந்திர காங்கிரஸார் எதிர்ப்பு
ஹைதராபாத்: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆந்திரா மூலமாக மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அம் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவரான ஜெய்ராம் ரமேஷ் கடந்த 2004ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந் நிலையில் அடுத்த மாதம் நடக்கும் ராஜ்யசபா தேர்தலிலும் மீண்டும் ஆந்திராவிலிருந்து போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அந்த மாநிலத்தில் இருந்து 4 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற நிலையில் அந்த இடங்களுக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந் நிலையில் அதில் ஒரு இடத்தை கர்நாடகத்தைச் சேர்ந்தவரான ஜெய்ராம் ரமேஷ் சுருட்டிக் கொண்டு போவதற்கு ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆந்திர மூலம் எம்பியானாலும் கூட அந்த மாநிலத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் எந்த நலத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெய்ராமுக்கு சீன ஊடகங்கள் ஆதரவும், எதிர்ப்பும்:
சமீபத்தில் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெய்ராம் ரமேஷ் அங்கு நிருபர்களிடம் பேசுகையில், சீனாவுடனான வர்த்தக விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கை காட்டுகிறது. இத்தகைய அதீத எச்சரிக்கை உணர்வு அண்டை நாடான சீனாவிடம் தேவையற்றது என்றார்.
ஜெய்ராம் ரமேஷின் இந்தக் கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இந் நிலையில் ஜெய்ராம் ரமேஷின் சில கருத்துகளுக்கு சீன ஊடகங்கள் ஆதரவும், சல கருத்துக்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
சீனா டெய்லி என்ற பத்திரிகை தனது தலையங்கத்தில், ஜெய்ராம் ரமேஷின் கருத்து விவேகம் உள்ள கருத்தாகும். அவரது கருத்துப்படி இந்தியா, சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ள இருதரப்பு வர்த்தகத்தில் உள்ள தடைகளை அகற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா, சீனாவைத் தனது போட்டி நாடாகக் கருதாமல் நம்பிக்கைக்குரிய தோழமை நாடாக பாவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால், பிரம்மபுத்திரா நதி நீர்ப் பிரச்சனை தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட கருத்துகளை அந்த பத்திரிக்கை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யர்லங் ஜாங்போ என்ற பெயரில் பிரம்மபுத்திரா நதி சீனாவில் ஓடுகிறது. சீனாவைக் கடந்து இந்தியாவுக்குள் வந்ததும் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. யர்லங் ஜம்போ அணைக்கு குறுக்கே பெரிய அணை கட்ட சீனா உத்தேசித்ததுள்ளது. இதன் மூலம் அந்த நதியின் நீரைத் திருப்பிவிட்டு பாசனத்துக்கும், நீர்மின் உற்பத்திக்கும் நீரைப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நதி திட்டம் குறித்து ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்த எதிர்ப்பு குறித்து ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில்,
சீனாவிற்குள் ஓடும் நதிக்கு குறுக்கே அணை கட்டி நீரைத் திருப்பிவிட சீனா போடும் திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications