தன்மான அன்னையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்!- சீமான்
சென்னை: துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது...என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன், என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர்.
ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த, இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவில் அரசு சொல்கிற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சைக் காலம் முடிந்ததும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விட வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களோ, அரசியல் வாதிகளையோ சந்திக்கக் கூடாது... என்கிற நிபந்தனைகளின் பேரில் விசா வழங்க இந்தியா முன் வந்திருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளனர்.
சிகிச்சைக்கு உரிய அனுமதியுடன் வந்தவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பியவர்கள் இப்போது கடுமையான நிபந்தனைகளை விதித்து தமிழ்த் தாயை அவமதித்து விட்டார்கள். மனிதாபிமானத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார்கள்.
மனிதாபிமானம் என்பது விதிகளுக்கோ, விதிமுறைகளுக்கோ அப்பாற்பட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டும் அதைச் செய்யலாம் என்கிற நிலையில், எண்பது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நிலையான நினைவுகள் இன்றி இருக்கும் தாயை ஒரு பயங்கரவாதி போல சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ஏனைய இனங்கள் எள்ளி நகையாடும் விதமாக நடந்து கொண்டன மத்திய- மாநில அரசுகள்.
சிகிச்சைக்கு வந்த தாயாரை, வயதான முதியவர் என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பி அலைக்கழித்த மத்திய- மாநில அரசுகள், இன்று ஒரு மாதம் கழித்து அவரைக் கொலைக் குற்றவாளியைப் போல் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி என்ற பெயரில் அழைத்து சிறைக் கைதியாக நடத்த முயற்சிக்கின்றன.
ஆனால் அந்தத் தாயோ, இவர்களை நன்கு அறிந்தவர். அவர் கணைக்கால் இரும்பொறை வந்த இனத்தின் பெருமை பேசுகிற மாவீரனைப் பெற்ற தாய்.
அவர் இவர்களை நன்கு அறிந்ததால்தான், துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது... என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு இந்தியா வர மறுத்துள்ளார்.
அவரது தாய் மண் இன்று எதிரியான சிங்களனின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சென்றுள்ளார்.
அன்னையின் இந்த முடிவு அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக் கறையை மாற்றி விடலாம் என எண்ணியவர்களுக்கு சரியான சவுக்கடியாகும்.
துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது...என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வர மறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications