சிறுதாவூர் கமிஷன் அறிக்கை: சிபிஎம்-திருமா வரவேற்பு
சென்னை: சிறுதாவூர் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சிறுதாவூர் என்னும் ஊரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்துவரும் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் உழுவதற்கு நிலமும் குடியிருப்பதற்கு வீட்டு மனையும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அந்நிலங்களை உழுது பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், கலப்பை மற்றும் மாடுகள் வாங்குவதற்கும் நிதி உதவி செய்யப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் தாழ்த்தப்பட்டோரைத் தவிர வேறு எவரும் விலைக்கு வாங்கக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறுதாவூரில் கட்டியுள்ள அரண்மனை தொடர்பாக பெரும் விவாதம் எழுந்தது. அதனையொட்டி பல்வேறு அமைப்புகளாலும் அரசியல் கட்சியினராலும் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நிலங்களுக்குரிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திட்டமிட்ட மோசடிக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தலித் அமைப்புகள், இடதுசாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இவற்றின் விளைவாக, தமிழக அரசு, நீதியரசர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் தீவிரமாக இயங்கி, தொடர்புடைய தனி நபர்களையும் நிறுவனங்களையும் விசாரித்தது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஓர் நீண்ட நெடிய அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் யாவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்து சட்டவிரோதமாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.
மேலும், அந்நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் கையகப்படுத்தப்படும் அந்த நிலங்களை விற்பனை செய்த தாழ்த்தப்பட்டோருக்கே திருப்பி வழங்கக்கூடாது எனவும் பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையத்தின் இந்தப் பரிந்துரைகளை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது. அத்துடன் தமிழகமெங்கிலும் இவ்வாறு தாழ்த்தப்பட்டோருக்கான நிலங்களை, குறிப்பாக, பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டு உரிய மக்களிடம் ஒப்படை செய்வதற்கு தமிழக அரசு தனி விசாரணை ஆணையம் ஒன்றை உடனடியாக அமைத்திட வேண்டுமென என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென, வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
கமிஷன் அறிக்கை-மார்க்சிஸ்ட் ஏற்றது:
இந் நிலையில் சிறுதாவூரில் மோசடியாக பட்டா செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை தலித் மற்றும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
சிறுதாவூரில் பிரச்சனைக்குரிய நிலத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற ஏழைகள் மற்றும் தலித், பழங்குடியினருக்கு வழங்குவது என விசாரணை கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசிடமிருந்து நிலம் பெற்று, அதனை இழந்து பாதிக்கப்பட்டுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
சிறுதாவூர் பங்களாவை ஒட்டியுள்ள அரசு புறம் போக்கு நிலம் பங்களா உரிமையாளர்களால் மோசடியாக பட்டா செய்யப்பட்டுள்ளது குறித்து கமிஷன் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சிறுதாவூர் பங்களா உரிமையாளர்களால் மோசடியாக பட்டா செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த தலித் மற்று ஏழைகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இது தொடர்பாக நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் பதிலளிக்கையில், நீதிபதி சிவசுப்பிரமணியன் அறிக்கையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications