முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.
2005-ம் ஆண்டில், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும், அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார் குஷ்பு. மேலும் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி கேவலமான முறையில், பெட்டிக் கடையில் விற்கும் வாழைப்பழத்துக்கு ஒப்பிட்டு கருத்து கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து, குஷ்பு மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆயின. இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார்.
மாலை 4.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நடிகை குஷ்பு, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதேபோல், அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோசி மணி, பூங்கோதை ஆலடி அருணா, தமிழரசி, கீதாஜீவன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்தார்.
நடிகை குஷ்புவுக்கு தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜகான்பேகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு ரூ.500 கொடுத்து தன்னை தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
'நற்செய்தி' கூறிய முதல்வர்!
பின்னர், முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருமதி குஷ்பு சுந்தர் இன்று (நேற்று) திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று உறுப்பினராக பொறுப்பேற்க வழிவகை செய்து, உறுப்பினராகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர்.
குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு, தி.மு.க வளர்ச்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?.
குஷ்புவைப் பொறுத்தவரையில் அவர் முற்போக்கான கொள்கை உடையவர் என்பதை நீண்ட காலமாக நான் அறிவேன். குறிப்பாக பெரியார் என்ற திரைப்படத்தில் மணியம்மையார் பாத்திரத்தை அவர் தாங்கி நடித்த போது, பெரியாருடைய இயக்கத்திலும், திராவிடர் இயக்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்று இருந்த காரணத்தினால்தான் அவரால் மணியம்மை பாத்திரத்தை இயற்கையாகவே நடிக்க முடிந்தது என்பது என்னுடைய கருத்து.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் முற்போக்கு கருத்துகளுக்காகவும் வாதாடக் கூடிய - உணர்வும், ஆற்றலும் படைத்தவர் குஷ்பு என்பதால் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று கேட்டீர்கள் - தி.மு.க.விலே உள்ள மகளிர் அணியினர் மற்றும் கழகத்திலே உள்ள பல்வேறு அணியினர் கழகத்தின் வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுகிறார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்.
குஷ்புவுக்கு பதவி?
மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பொறுப்புகள் ஏதாவது அவருக்கு கொடுக்கப்படுமா?
நான் திராவிட இயக்கத்திலே சேர்ந்த போது எந்தப் பொறுப்பும் அளிக்கப்பட்டு - நானோ அல்லது நம்முடைய பேராசிரியரோ (க.அன்பழகன்) மற்றும் இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலினோ எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் இந்த இயக்கத்திலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை.
எங்களுடைய இயல்புகளையும், எங்களுடைய உழைப்பையும், எங்களுடைய ஆர்வத்தையும் பார்த்து இயக்கத்திலே உள்ளவர்கள், கழகத் தோழர்கள் எங்களை இந்த இடங்களிலே அமர்த்தியிருக்கிறார்கள்.
பேப்பரில் வந்ததுதானே....!
குஷ்பு முதலில் காங்கிரஸ் இயக்கத்திலே சேர தனக்கு ஆர்வம் இருக்கிறது என்று சொன்னதாக பேப்பரிலே செய்தி வந்தது. தி.மு.க. இதிலே போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?.
பேப்பரில் வந்ததுதானே?.. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!.
குஷ்பு திடீரென்று தி.மு.க.வில் சேரக்கூடிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?
மாலை 4 மணிக்கு சொன்னதால் உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இந்த முயற்சியிலே ஈடுபட்டு அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஜெ.வுக்குப் போட்டியா?
சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்புவை நிறுத்துவீர்களா?.
அப்படிப்பட்ட உத்தேசம் ஒன்றும் இல்லை.
ஆளுங்கட்சியில் சேருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாரா?
அப்படிப்பட்ட கேவலமான ஒரு முறையை நாங்களும் கடைப்பிடிப்பதில்லை, குஷ்புவும் அந்த முறைக்கு பணியக்கூடியவர் அல்ல.
சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெற்றி பெற்றது தி.மு.க.வில் சேர ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?.
அதுவும் மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்













Click it and Unblock the Notifications