வன்னிப் படுகொலை - வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி
இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஜெயராஜா கூறுகையில், சுதந்திரம், நீதியை மதிக்கும் ஒரு நாட்டின் இதயப் பகுதியில் நின்று கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். உலகம் பார்த்துக்கொண்டிருக்க முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்களை மொத்தமாக கொன்று குவித்த பேரவலத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
இதை நினைவு கூறும் வகையில் முதலில் வெள்ளை மாளிகை முன்பு கூடி கூட்டம் நடத்தினோம். பின்னர் ஒரு மைல் நீளத்திற்கு பேரணியாக சென்று தற்போது லிங்கன் மெமோரியல் முன்பு கூடியுள்ளோம்.
மனிதப் பேரவலத்தை நடத்திய கொடூரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்றார்.
அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் எலின் சான்டர் கூறுகையில், இலங்கையில் தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தினத்தை நினைவு கூற இங்கு அனைவரும் கூடியுள்ளோம். ஒரே நாளில் 40 ஆயிரம் பேரைக் கொல்லும் செயலை எந்த வார்த்தையில் விவரிப்பது என்றே தெரியவலில்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் கொல்லப்படுவதற்கு முன்பு உயிர்ப் பிரச்சினை கேட்டு கதறியுள்ளனர், கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்கள் மிருகத்தனமான முறையில் சிதைக்கப்பட்டுள்ளனர்.
நாகரீகமடைந்த உலக நாடுகள் நம்மைக் காக்கும் என போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் மிகவும் உறுதியாக நம்பினர். ஆனால் அவர்களது நம்பிக்கை வீண் போய் விட்டது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், இனப்படுகொலைகளுக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளே கிடையாது.
இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ வந்து நம்மைக் காப்பாற்றும் என அந்த அப்பாவி மக்கள் உறுதியாக நம்பினர். ஆனால் ஒருவரும் வராதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களது கதறல் யாருடைய காதுகளையும் எட்டவில்லை. யாருமே அப்பாவித் தமிழர்களை கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசை கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஜேன் ஜனநாயகம் உள்ளிட்ட பலரும் பேசினர்.













Click it and Unblock the Notifications