உத்தமபாளையம்- காலராவுக்கு மேலும் ஒருவர் பலி - எண்ணிக்கை 4 ஆனது
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காலராவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
உத்தமபாளையத்தில் அசுத்தமடைந்த குடிநீர் விநியோகம் ஆனதால் அங்கு வயிற்றுப் போக்கு பரவியுள்ளது. இதற்கு நேற்று பிற்பகல் வரை 3 பேர் பலியாகியிருந்தார்கள். நேற்று மாலை முத்துவாடன் என்பவர் உயிரிழந்தார். இதையும் சேர்த்து தற்போது பலி எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.
உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், எரசக்கநாயக்கனூர், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், க.புதுப்பட்டி, சின்னமனூர், போடி, தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேனி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே காலராவுக்கு பவித்ரா (10), கண்ணன் (50) மற்றும் லீலாவதி (48)ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.