பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரணாப் முகர்ஜி திறமையற்று செயல்படுகிறார் - கருத்துக் கணிப்பு
டெல்லி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறமையற்றவராக உள்ளதாக சிஎன்என்-ஐபிஎன், இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வை அவர் திறமையுடன் சமாளிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் பஞ்சாயத்து பேச பிரணாப்பைத்தான் சோனியா நம்புகிறார், அனுப்பி வைக்கிறார். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமாக பிரணாப் செயல்படத் தவறியுள்ளதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த துறைகளில் நிதியமைச்சகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது இந்தக் கருத்துக்கணிப்பில். 5 புள்ளிகளில் 3.5 புள்ளிகளை நிதியமைச்சகம் பெற்றுள்ளது.
நிதியமைச்சகத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாக 74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 60 சதவீதம் பேர் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மிக மெதுவாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
பிரணாபின் செயல்பாடுகள் ஸ்திரமாக இல்லை என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
விலைவாசி உயர்வு பிரச்சினையில், 63 சதவீதம் பேர் பிரணாப் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.