ராஜசேகர ரெட்டி மரணம் - 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ஹைதராபாத்: ஹெலிகாப்டர் விபத்தில், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்த வழக்கில், விமானப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரைத்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக புலன் விசாரணை செய்து அறிக்கையை மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
இதுகுறித்து சிபிஐ டிஐஜி லட்சுமிநாராயணா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை உரிய பராமரிப்பு செய்யாதது மற்றும் பைலட்டின் விமான இயக்க ஓட்டுநர் உரிமக் காலத்தை முறைப்படி பரிசோதிக்காதது ஆகிய காரணங்களுக்காக ஆந்திர விமானப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரமானந்த ரெட்டி மற்றும் இந்த கழகத்தின் தரக் கட்டுப்பாட்டு மேலாளர் லட்சுமண் ராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அதிகாரிகளும் தங்களுக்குரிய பணியை சரிவர செய்யாதது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்தில் சதி திட்டம் ஏதுமில்லை. அது ஒரு விபத்துதான் என்றார் லட்சுமிநாராயணா.