மங்களூர் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பரிதாப பலி
மங்களூர்: மங்களூர் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலியாகியுள்ள சோகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலையில் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஓடி வெடித்துச் சிதறியது. இதில் 159 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சமீர் ஷேக் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலியாகியுள்ள தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீரின் பாட்டி மரணமடைந்து விட்டார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவி, 2 குழந்தைகள், உறவினர்கள் என 16 பேரை இந்த விமானத்தில் மங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அத்தனை பேரும் விமானவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 24 வயதான சமீர் சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு தொழிலதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் வரவில்லை. மாறாக சவூதியலிருந்து மும்பைக்கு வந்து அங்கிருந்து மங்களூர் வரத் திட்டமிட்டிருந்தார். இதனால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
விபத்து குறித்து கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த சமீர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சவூதியிலிருந்து நேற்று நான் மும்பை வந்தேன். ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மங்களூர் செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இணைப்பு விமானம் கிடைக்கவில்லை.
இந்த விபத்தில் எனது தாய்மாமா, மனைவி, இரு குழந்தைகள், 12 தூரத்து உறவினர்களை இழந்துள்ளேன் என்றார் சோகத்துடன்.












Click it and Unblock the Notifications