சலுகைகள் அளித்த கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து இன்று அரசு ஊழியர்கள் மாநாடு
சென்னை : கடந்த ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பக் கொடுத்ததோடு, பல்வேறு புதிய சலுகைகளையும் அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் இன்று மாலை சென்னையில் நன்றிப் பெருவிழா என்ற பெயரில் மாநாடு நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
முன்னதாக இன்று காலை நுங்கம்பாக்கத்தில் நன்றிப் பெருவிழா பேரணி நடைபெற்றது. மாநில மகளிர் அணிச் செயலாளர் பரமேஸ்வரி தலைமையில் நடந்த இந்தப் பேரணியை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டபடி சென்றனர்.
முன்னதாக பேரணியைத் தொடங்கி வைத்து அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசுகையில், கடையேழு வள்ளல்கள் என்று கூறுகிறார்கள். அந்த வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக, தலை சிறந்த வள்ளலாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார் என்றார்.
அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி, சென்னை மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications