Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா மீது எந்த தவறும் இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

Manmohan and Minister Raja
டெல்லி: முந்தைய பாஜக கூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள், விதிமுறைகளின்படி தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. இதில் அமைச்சர் ராஜா மீது எந்தத் தவறும் இல்லை என்று பிரதம் மன்மோகன் சிங் கூறினார்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு விரிவான பேட்டியளித்தார்.

85 நிமிடங்கள் நடந்த சந்திப்பு:

விஞ்ஞான் பவனில் நடந்த இந்த சந்திப்பில் நாடு முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ஒன்றே கால் மணி நேரம் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார்.

அவரிடம் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில்:

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் அமைச்சர் ராசாவை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே, தான் நடந்து கொண்டதாக அமைச்சர் ராசா விளக்கினார்.

மேலும் 2003ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராசா கூறினார்.

பாஜக உருவாக்கிய விதிமுறைகளின்படி தான்:

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு, அந்த நேரத்து கொள்கைகள் அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது முந்தைய பாஜக கூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள், விதிமுறைகளின்படி தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. இதில் ராஜா மீது எந்தத் தவறு இல்லை.

இதில் உள்ள முழு பிரச்சனையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ராஜா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு பதிலளித்த பிரதமர்,

மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இந்த விஷயத்தில் (ராஜாவை நீக்குவது குறித்து) நான் ஒரு திட்டவட்டமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கும், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

ஆட்சியின் எந்த மட்டத்தில் ஊழல் நடந்ததாலும் அதற்கு எதிராக நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

ராகுல் பிரதமராக மகிழ்ச்சியோடு வழி விடுவேன்:

ராகுல் காந்தி பிரதமராகும் வகையில் உங்கள் பதவிக் காலத்திலேயே விலகி வழி விடுவீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த பிரதமர்,

காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் மிகச் சிறப்பான பணியை ராகுல் காந்தி செய்து கொண்டிருக்கிறார். அவர் மத்திய அமைச்சர் பதவி வகிக்க எல்லா தகுதிகளும் உள்ளது. இது தொடர்பாக நான் பல முறை ராகுலிடம் விவாதித்து விட்டேன். ஆனால், அமைச்சரவையில் சேர அவர் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. அவர் சாதகமான பதிலை சொல்லவில்லை. ராகுல் அமைச்சரவையில் சேர்ந்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும்.

மத்திய அமைச்சரவையில் சேர ராகுல் காந்தி எப்போது விருப்பம் தெரிவித்தாலும், அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் யாருக்காகவும் (ராகுல் உள்பட) நான் பிரதமர் பதவியை விட்டு விலகி மகிழ்ச்சியுடன் வழி விட தயாராக இருக்கிறேன்.

கட்சிப் பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் இளைஞர்கள் வர வேண்டும் என்று நான் எண்ணுவது உண்டு. இளைஞர்கள் யார் வந்தாலும் வழி விட நான் தயாராகவே உள்ளேன் என்றார்.

சாதி வாரி கணக்கெடுப்பு:

தொடர்ந்து அவர் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது கவனத்தில் கொள்ளப்படும். இதுபற்றி ஆய்வு செய்ய கேட்டுள்ளேன்.

புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டம் ஏதும் இப்போது அரசிடம் இல்லை. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஆய்வை கமிட்டி மேற்கொண்டுள்ளது.

விலைவாசி.. தீவிரவாதம்:

நாங்கள் 2வது முறை ஆட்சிக்கு வந்த ஓராண்டில் போதுமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்துவோம்.

இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும். இதை 10 சதவீதமாக அதிகரித்துக் காட்டி சாதனை புரிவோம்.

விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. பண வீக்கம் அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்தி சாதாரண மக்களை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் பண வீக்கம் வெகுவாக கட்டுக்குள் வந்திவிடும்.

நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதம் எந்த மதத்தையும் சார்ந்ததல்ல.
தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த வகையான தீவிரவாதத்தையும் அனுமதிக்க மாட்டோம்.

நக்சலைட்டுகள் சவால்:

நக்சலைட்டுகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளனர். இந்தப் பிரச்சனையை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் கட்டுப்படுத்தத் தவறினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை:

காஷ்மீரில் உள்ள அனைத்து அமைப்புகளும் வன்முறையைக் கைவிட்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும். பாகிஸ்தானுடன் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாதது தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

பேச்சுவார்த்தை இந்தியா விரும்பும் வகையிலான உயரத்தை இன்னும் எட்டவில்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை குறைவுதான். முட்டுக்கட்டையாக உள்ளது. இருந்தாலும் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளால் பல முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும். சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதில் அரசு தலையிடுவது இல்லை.

தனியார்துறையில் இட ஒதுக்கீடு:

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

சோனியாவுடன் கருத்து வேறுபாடு இல்லை:

சோனியா காந்திக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவர். நான் ஒரு காங்கிரஸ்காரன். நான் வாரம் ஒரு முறை சோனியாவை சந்தித்து ஆலோசித்து வருகிறேன். அவருடைய ஆலோசனையை பெற்று அவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறேன் என்றார் பிரதமர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+