ராஜ்யசபா எம்.பி பதவி: காங்கிரசில் ஈவிகேஎஸ், திருநாவுக்கரசர், தங்கபாலு போட்டா போட்டி!

ராஜ்யசபாவில் 49 எம்பிக்களின் பதவிக் காலம் முடியவுள்ளது. இந்த இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் 11 எம்.பிக்களும், தமிழ்நாட்டில் 6 எம்.பிக்களும், கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 4 எம்பிக்களும், பிகாரில் 5 இடங்களும், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசத்தில் தலா 3 எம்பிக்களும், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் 2 எம்.பி.க்களும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு எம்பியின் பதவிக் காலமும் முடிவுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிமுகவைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, எஸ்.அன்பழகன், கோவிந்தராஜ், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், பாமகவி்ன் டாக்டர் அன்புமணி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது.
தமிழகத்தில் சட்டசபையில் இப்போதுள்ள பலத்தின்படி காலியாகும் 6 இடங்களில் 3 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் காங்கிரசும், இடதுசாரிகள், மதிமுக ஆதரவுடன் இரு இடங்களில் அதிமுகவும் வெல்ல முடியும்.
திமுக வேட்பாளர்கள் வரும் 30ம் தேதி நடைபெறும் அக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை நடைபெறும் அக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுவர் என்று தெரிகிறது.
ராஜ்யசபா பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மாநிலவாரியாக தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் இருந்து அந்தக் கட்சியின் சார்பில் ஒருவரை ராஜ்யசபாவுக்கு தேர்நெடுக்க முடியும் என்ற நிலையில்
இந்த இடத்துக்கு வேட்பாளரை தேர்வு செய்ய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோருடன் நேற்று சோனியா ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் இந்த இடத்கைப் பிடிக்க தமிழக காங்கிரசார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசர், தங்கபாலு, கார்வேந்தன், ராம்பாபு, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் குறி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக குலாம் நபி ஆசாத்தை தனித்தனியே சந்தித்துப் பேசி வருகின்றனர்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட வைகோ-தா.பாண்டியன்:
அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் குறி வைத்தனர்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பேசியும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுவது என்றும், இடதுசாரிகளும் மதிமுகவும் ஆதரவு தருமாறும் கூறிவிட்டார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் வைகோவும், தா.பாண்டியனும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications