சென்னை மாநகரப் பேருந்தில் திடீர் தீ: எரிந்து சாம்பலானது-பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னை வள்ளலார் நகரில் இருந்து செங்குன்றத்துக்கு சென்ற மாநகர போக்குவரத்து கழகப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அலறி்க் கொண்டு பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.
இந்தத் தடத்தில் பஸ் எண் எம்-57 பேருந்து இயக்கப்படுகிறது. இன்று காலை 5 மணிக்கு வள்ளலார் நகரில் இருந்து செங்குன்றத்துக்கு பஸ் புறப்பட்டது.
பஸ்சை டிரைவர் கோபிநாதன் ஓட்டினார். 5.40 மணிக்கு மூலக்கடை வழியாக புழல் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சுக்குள் கரும்புகை பரவியது.
இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். என்ன நடக்கிறது என்பதை டிரைவர் அறியும் முன்பே பஸ்சில் தீப் பிடித்துக் கொண்டது.
அதிகாலை என்பதால் பஸ்சில் 11 பயணிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினர்.
டிரைவரும் கண்டக்டர் செல்வராஜும் பஸ்ஸை விட்டு இறங்கி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர்.
செங்குன்றத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. அதற்கு பஸ் முழுவதுமாக எரிந்து கூடாக மாறிவிட்டது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications