முடிகிறது 'அக்னி நட்சத்திரம்'!-வருகிறது தென் மேற்கு பருவமழை

இந்தக் கோடையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கத்தைவிட மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.
பிப்ரவரியிலேயே ஆரம்பித்துவிட்ட கடும் வெயில் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந் நிலையில் மிக அதிக வெப்பம் நிலவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதனால் வெயில் சுட்டெரித்து வந்தது.
இடையில் லைலா புயல் காரணமாக மழையும் சூறாவளிக் காற்றும் வீசியதால் வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் கொஞ்சம் தப்பினர். ஆனால், இந்த ஆறுதல் 3 நாட்களே நீடித்தது.
லைலா கலைந்து போய்விட்ட நிலையில் மீண்டும் கடும் வெப்பம் தாக்க ஆரம்பித்தது.
இந் நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவுக்கு வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும் வெயிலின் தாக்கம் உடனடியாகக் குறைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் தான் நிம்மதி பிறக்கும்.
வானம் பார்க்கும் வானிலை மையம்:
இந்தியாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் தென் மேற்கு பருவமழை காலமாகும். இந்த மழைக்கான அறிகுறி வழக்கமாக மே மாதம் 3வது வாரத்தில் தெரிய ஆரம்பி்க்கும்.
ஆனால், கடந்த 6 நாட்களாக மழை தொடங்குவதற்கான பெரிய அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இருப்பினும் கவலைப்படத் தேவையில்லை என்றும், அடுத்த 3, 4 நாட்களில் மழைக்கான அறிகுறிகள் தென்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 60 சதவீத விவசாய நிலங்களில் விளைச்சலைத் தருவது இந்த தென் மேற்கு பருவமழை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதை அடுத்த 6 மாதத்திலாவது கட்டுப்படுத்த இந்த மழையைத் தான் மத்திய-மாநில அரசுகளும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு விலைவாசி இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை பொய்த்துப் போனது தான் முக்கிய காரணமாகும். 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு இந்தப் பருவமழை மிகக் குறைவாகவே பெய்தது.
''வாம்மா.. மின்னலு..'' என்ற வடிவேலுவின் ஜோக் போல வந்த வேகத்தில் போய்விட்டது.
இந் நிலையில் இந்த ஆண்டு மழை வழக்கமான அளவுக்கு இருக்கும் என்று புனே நகரில் உள்ள தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
30ம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறி முதலில் கேரளாவில் தெரிய ஆரம்பிக்கும் என இந்த மையத்தின் இயக்குனர் சிவானந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications